வியாபாரியை அடித்துக்கொன்ற போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை.. ராமதாஸ்.!
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்துக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் முருகேசன், சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது. சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு அதே நாளில் வணிகர் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.