ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி ஆவேச பிரசாரம்.!
ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி ஆவேச பிரசாரம்.!
By : Kathir Webdesk
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை பவானியில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இங்கு தான் படித்தேன். பவானி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். இந்த பவானி நகரம் முழுவதும் சிறுவயதிலே நன்கு அறிந்த பகுதி. பவானி தொகுதி முழுவதும் எனக்கு நன்றாக தெரியும்.
இந்த பகுதியில் தான் எனது ஊர் இருக்கிறது. பவானி தொகுதியையும் எடப்பாடி தொகுதியையும் இடையில் பிரிப்பது காவிரி ஆறு ஒன்றுதான். எனவே நன்கு அறிமுகமான ஈரோடு பவானி தொகுதியிலேயே முதன் முதலாக பேசுவதில் எல்லா வல்ல இறைவன் எனக்கு கொடுத்த பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.
இன்றைக்கு முதலமைச்சர் என்பது ஒரு பணி. இங்கு வருகை தந்து அமர்ந்திருக்கிறீர்களே அத்தனை பேரையும் தமிழகத்தின் முதலமைச்சர்களாக நான் பார்க்கிறேன். எனவே நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுகின்ற பணிதான் எனது பணி.
ஆகவே உங்கள் பகுதியில் வாழ்ந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்களுடைய எண்ணங்களை முழுமையாக தெரிந்தவர் இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சராக இன்றைக்கு பதவி வகித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆகவே நமது பகுதியில் என்ன பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நன்கு உணர்ந்திருக்கிறேன். இன்று வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி நம்முடைய பவானி சட்டமன்ற தொகுதி.
ஆகவே வேளாண் பெருமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும். அது எங்களுடைய அரசு இன்று கவனமாக பார்த்து செயலாற்றி கொண்டிருக்கிறது. வேளாண் பெருமக்கள் என்று சொன்னால் அதற்கு நீர் தேவை. தண்ணீர் இருந்தால் தான் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும்.
வேளாண் பணிகள் நடைபெற்றால்தான் விவசாய தொழிலாளிக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆக இரண்டையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகதான் எங்களுடைய அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து இன்றைக்கு நமது ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற பெரும்பாலான ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக இன்றைக்கு முழுக்க முழுக்க விவசாய பங்களிப்போடு அந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள் எல்லாம் இன்றைக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்த நீர் முழுவதும் சேமித்து வைத்து இன்று குளம் நிரம்பி வழிவதை இன்றைக்கு பார்த்து செல்ல முடிகிறது. இதனால் கோடை காலத்திலும் தேவையான நீர் கிடைக்கிறது. குடிப்பதற்கு நீர் இருப்பு உள்ளது. ஆகவே வேளாண் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரை பெருக்குவதில் தமிழக அரசு இன்று முன்னுதாரணமாக திகழ்கிறது.
அதேபோன்று ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுதல், பவானிசாகரிலிருந்து காலிங்கராயன் வரை தடுப்பணை கட்ட நம்முடைய அரசு திட்டமிட்டுள்ளது. பவானிசாகரில் இருந்து உபரியாக வருகின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மேலும், ஸ்டாலின் மக்களை கூட்டி மக்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே இதைப்போன்று மக்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாயிற்று. மக்களை இதுபோன்று தொடர்ந்து அவர் ஏமாற்றி வருகிறார். தற்போது பெண்களை கூட்டி வாத்தியார் போன்று கூட்டம் நடத்தி வருகிறார்.
இதில் ஏதாவது பயனுள்ளது பேசி வருகிறாரா? இல்லை. அரசை பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் குறை சொல்லி வருகின்றார். முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டியது எங்களது பொறுப்பு. அவர் சொன்னது போன்ற டெண்டரே நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடைபெறும். எனவே அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.