வேல்யாத்திரை: பொதுவான விதிகளை அமல்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
வேல்யாத்திரை: பொதுவான விதிகளை அமல்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
By : Shiva V
பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் முருகன் தலைமை நடத்தப்படும் வெற்றிவேல்யாத்திரையை தடுக்க கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டதாலும்ம முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததால் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் சட்ட விதிகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி பாஜகவினர் நடந்து கொண்டதாகவும் வாதாடினார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் மற்ற கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பா.ஜ.கவினர் கோவிலுக்குத்தான் செல்கின்றனர் என்பதால் அதற்கு அனுமதி தேவையில்லை என்றும் சுட்டி காட்டினார்.
இவ்வாறு வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த நிலையில் 30 பேருடன் ஒரு கோவிலில் இருந்து மற்றொரு கோவிலுக்கு செல்லும் பயணம் தான் இது என்றும் பா.ஜ.க தலைவர் முருகனுடன் செல்லும் வாகனங்களில் இருவர் மட்டுமே இருப்பர் என்றும் பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டனவா என்று கேள்வி எழுப்பியதோடு அனைவருக்கும் பொதுவாக விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் விதிகளை அமல்படுத்தினால் ஒரே மாதிரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தேர்ந்தெடுத்து பாரபட்சமாக செயல்படுத்த கூடாது என்றும் தமிழக அரசு அதிகாரிகளை எச்சரித்தனர்.
பா.ஜ.க-வின் வெற்றிவேல் யாத்திரையை தடைசெய்த விஷயத்தில் தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் பா.ஜ.க-விடம் மட்டும் தமிழக அரசும் காவல்துறையும் பாரபட்சமாக நடந்துகொள்கின்றன என்றும் பல தரப்புகளிலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிபதிகளின் அறிவுறுத்தல் அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.