தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா பற்றி நான் தவறாக பேசவில்லை - விஜய் சேதுபதியின் விளக்கம் !

"தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை" என நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் ஒருவரால் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கிய ரசிகர் மகா காந்தி கூறும்பொழுது, "அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதியிடம் 'விருது பெற்றதற்கு வாழ்த்துகள்' என்றேன். குருபூஜைக்கு ஏன் வரவில்லை என்று அவரிடம் கேட்டேன். அதற்கு விஜய்சேதுபதி யார் குரு? என்று கேட்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை தாக்கினார்கள். அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன். இதுதொடர்பாக விமான நிலைய சி.சி.டி.வி காட்சிகளை கேட்டுள்ளேன். அதன்மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிருபிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது, "பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், நீ என் ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகர்தான் என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார். மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை" என விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.