எனது ஓட்டு விற்பனைக்கு.. தருமபுரியில் நூதன முறையில் வலம் வந்த கூலித்தொழிலாளி!
தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரே எனது ஓட்டு விற்பனைக்கு என்று பதாகையுடன் வந்த கூலித்தொழிலாளியால் பரபரப்பு நிலவியது.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு அதிகாரிகள் மாவட்டம் தோறும் பல்வேறு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரே எனது ஓட்டு விற்பனைக்கு என்று பதாகையுடன் வந்த கூலித்தொழிலாளியால் பரபரப்பு நிலவியது. அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் 46, இவருக்கு மனைவி மற்றும் 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இது பற்றி அவர் பேசும்போது, அனைத்து வாக்காளர்களும் பணத்தை வாங்கிக்கொண்டுதான் ஓட்டு போடுகின்றனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வாங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் எனது ஓட்டு விற்பனைக்கு என்று எழுதியிருந்தேன். மாவட்டம் முழுவதும் செல்வேன் என கூறியுள்ளார்.