நேஷனல் ஹெரால்டு வழக்கு - அமலாக்கத்துறை சோதனை நடந்தது எங்கே?
யங் இந்தியன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இந்தியன் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிட்டு வந்த அசோசியேட்டட் நிறுவனத்தை சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை பங்குதாரராக கொண்ட நிறுவனம் கைப்பற்றியது. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
ஆனால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலக வளாகத்தில் உள்ள யங் இந்தியன் அலுவலகத்தில் சோதனை நடத்த முடியவில்லை. எனவே அந்த அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் அதிகாரிகள் சீல் வைத்தனர். அலுவலகத்துக்குள் இருக்கும் ஆதாரங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தற்காலிக சீல் வைக்கப்பட்டது அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று 12.40 மணி அளவில் யங் இந்தியன் அலுவலகத்திற்கு அவர் வரவழைக்கப் பட்டார்.
பின்னர் அவரது முன்னிலையில் இந்தியன் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். இதில் வழக்குக்கு தேவையான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவவகாரம்
மாநிலங்களவையில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே மோதல் ஏற்பட்டது.
காலையில் அவையில் இந்த பிரச்சினையை எடுப்பு பேசிய கார்கே, நாடாளமன்றம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது அழகா? இப்படியே போனால் நமது ஜனநாயகம் வாழுமா? நமது அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவோமா? இது வேண்டுமென்றே நம்மை தளர்ச்சி அடைய செய்யவும், அழிக்கவும் செய்யப்படுகிறது என குற்றம் சாட்டினார். இதைப்போல மோடி-ஷா அரசின் மற்றுமொரு கீழ்த்தரமான நடவடிக்கை இது என ஜெயராம் ரமேஷும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் சட்டம் மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இந்த அரசு தலையிடுவது இல்லை எனவும் காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் தங்கள் ஆட்சியின் போது அவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறினர்.
தவறு செய்தவறுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறிய அவர் காங்கிரஸ் தலைவர்கள் தப்பி ஓடுவதற்கு பதிலாக சட்டத்தை பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
இதனால் அவையில் பரபரப்பபு ஏற்பட்டது.