புதுச்சேரி : சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்.!
புதுச்சேரி : சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்.!
By : Kathir Webdesk
புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மானியம் வழங்காமல் உள்ளது. இதற்கான கோப்பு ஏற்கனவே முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டபோது அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிரண் பேடி திருப்பி அனுப்பிவிட்டதாக முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே இதற்கான கோப்பை முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மீண்டும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் கிரண் பேடி தனது வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தகவலில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கல்வித்துறை உதவி பள்ளிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக்கட்டணம் தொடர்பான கணக்குகளை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான சரிபார்க்கும் நேரம் காலதாமதம் ஆகும் என்பதால் இடைக்கால நடவடிக்கையாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதித்துறை பரிந்துரைத்தபடி 35 பள்ளிகளுக்கு ரூ.8.45 கோடி உதவித் தொகையை வழங்க ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. மானிய உதவி வழங்குவதற்கான விதிகளை மறுஆய்வு செய்ய கல்வித்துறை செயலர் தலைமையில் நிதித்துறை, சட்டத்துறை செயலர்களை உறுப்பினர்களாக கொண்ட குழுவையும் உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்வதற்கான கோப்புக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன்படி சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சலுகை கிடைக்கும். இதனால் ஏற்படும் ரூ.21 கோடி இழப்பை அரசு கூடுதல் நிதிஆதாரங்கள் மூலம் சரிசெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.