புதுச்சேரி : காலியாக உள்ள 9500 பணியிடங்களை நிரப்பக்கோரி இளைஞர்கள் போராட்டம்.!
புதுச்சேரி : காலியாக உள்ள 9500 பணியிடங்களை நிரப்பக்கோரி இளைஞர்கள் போராட்டம்.!
By : Kathir Webdesk
புதுச்சேரியில் சமீக காலமாக கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இளைஞர்கள் சிக்கி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர் மேலும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 9,500 காலியிடங்களுக்கு 1லட்சத்து 80ஆயிரம் நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் தேர்தல் வாக்குறுதியாக வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி புதுச்சேரி மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் தலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. எல்லைபிள்ளை சாவடி பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து 500க்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் ஊர்வலமாக சென்றனர்.
பேரணியை பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், பாஜக மாநில துணைத்தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். பாஜக இளைஞர் அணியின் பேரணி தட்டாஞ்சாவடியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே வந்த போது காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்த முயறசித்தனர்.
போலீசாரின் தடுப்புகளை மீறி வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்படவில்லை எனக்கூறி மலர்வலையம் வைக்க முயன்றனர் இதனால் போலீசாருக்கு பாஜகவினருக்குமிடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனைத்தொடர்ந்து போலீசாரின் செயலை கண்டித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆளும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பாஜக இளைஞர் அணியினர் நடத்திய முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் புதுச்சேரியில் வேலையின்மை காரணமாக ஆயிரம் ரூபாய்க்கு இளைஞர்கள் கொலை செய்யும் வேலையை செய்வதற்கவும், கஞ்சா, திருட்டு போன்ற தவறான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கடவுளிம் பெயரை முதலமைச்சர் நாராயணசாமி வைத்துக்கொண்டு இந்து கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றும் கடந்த 6ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு மத கலவரமும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார் மேலும் வேல் யாத்திரை ஊர்வலத்தால் எந்த மத கலவரமும் நடைபெறாது என்றும்
ஓட்டு வங்கி அரசியலை திமுக கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர் என்றார் மேலும் திமுக தலைவர் ஸ்டாலினின் பினாமி முதலமைச்சராக நாராயணசாமி செயல்படுகிறார் என்றார்.