போலி பணி நியமன ஆணை - வதந்திகளுக்கு பொதுமக்கள் இரையாக வேண்டாம்! வருமான வரித்துறையின் எச்சரிக்கை
By : Muruganandham
தமிழ்நாட்டில் வருமானவரித்துறை அதிகாரியாக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், புதுதில்லி வருமான வரித்துறையைச் சேர்ந்த திரு விகாஸ் யாதவ் கையெழுத்திட்டு மத்திய மனிதவளத்துறை, வருமான வரித்துறை, மயூர் பவன், கானட் லேன், கானட் பிளேஸ், தில்லி-110001 என்ற முகவரியில் இருந்து அவருக்கு பணி சம்பந்தமான நிபந்தனைகளுடன் கூடிய, பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன.
வருமான வரித்துறை அதிகாரி என்ற பொறுப்பு முற்றிலும் பதவி உயர்வின் அடிப்படையிலானது, அந்த பொறுப்பிற்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
மேலும், வருமான வரித்துறையில் பல்வேறு அரசிதழ் பதிவுறா பதவிகளுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மட்டுமே தேர்வு நடைபெறும். அதேபோல வருமான வரித்துறையில் அரசிதழ் பதிவு பெற்ற பதவிகளுக்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தின் வாயிலாக, குறிப்பிட்ட நடைமுறையில் தேர்வு நடைபெறும்.
இந்தப் பணி நியமன நடைமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களையோ, அல்லது அலுவலகங்களையோ, பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகளுக்கு பொதுமக்கள் இரையாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.