Kathir News
Begin typing your search above and press return to search.

'கட்சியையே மாத்துங்க, அடி மட்ட தொண்டனுக்கு பதவி குடுங்க' - பிரசாந்த் கிஷோரின் அதிரடி திட்டம், கேட்குமா காங்கிரஸ்?

கட்சியையே மாத்துங்க, அடி மட்ட தொண்டனுக்கு பதவி குடுங்க - பிரசாந்த் கிஷோரின் அதிரடி திட்டம், கேட்குமா காங்கிரஸ்?

Mohan RajBy : Mohan Raj

  |  22 April 2022 12:30 PM GMT

நேரு குடும்பத்து கட்சியான காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முக்கிய சில யோசனைகளை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்துள்ளார், அழியும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடைசி அஸ்திரமாக பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் பார்க்கப்படுகிறது அவ்வாறு இந்த திட்டங்கள் நடைபெறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் சில மாநிலங்களிலாவது ஆட்சியில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட கட்சி, நேரு குடும்பத்து கட்சி, சுதந்திர போராட்ட காலத்து தலைவர்களின் கட்சி, 3 பிரதம மந்திரிகளை ஒரே குடும்பத்திலிருந்து கொடுத்த கட்சி, என பெயரளவில் பல பெருமைகளை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தற்போது இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் நேரு குடும்பத்தின் வாரிசுகளை தலைமை பொறுப்பில் இருப்பதும், மாநிலங்களில் கட்சிக்குள் பல கூட்டணிகள் உருவாகி கட்சியில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே காரணமாகும். இந்நிலையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, இதே நிலையில் போனால் காங்கிரஸ் கட்சியிடம் எஞ்சியுள்ள ராஜஸ்தான், சட்டிஸ்கர் என இரு மாநிலங்களும் கூட கையை விட்டுப் போய்விடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அசுர பலத்துடன் இருக்கும் பா.ஜ.க'வை எதிர்கொள்ளத் திராணியற்று காங்கிரஸ் கட்சி நிற்கிறது, அதுமட்டுமின்றி குட்டி குட்டி மாநில கட்சிகளை நம்பி பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கடைசி நம்பிக்கையாக தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் கட்சிக்கு வகுத்து கொடுத்ததாக தெரிகிறது.

அப்படி அந்த தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் கட்சி எந்த ஒரு கோஷ்டி பூசலும் இல்லாமல், வாரிசு பிரச்சினையும் இல்லாமல் மாநிலங்களில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் கடைபிடித்தால் மட்டுமே அழியும் நிலையிலிருக்கும் கட்சிக்கு சிறிதாவது உயிர் கிடைத்தது போல் இருக்கும் என பல அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த மூன்று நாட்கள் தொடர ஆலோசனை நடத்தினார், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பல காங்கிரஸ் கட்சி மீதான குற்றங்களை அடுக்கினார் குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.


- மக்களுக்கு புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும்.

- காங்கிரஸ் கட்சியின் மதிப்பை மதிப்புகள் மற்றும் அடிப்படை கொள்கைகளை பாதுகாத்தல் வேண்டும்.

- உரிமை உணர்வு மற்றும் தனிமனிதர் புகழ்பாடும் முகஸ்துதிகளை அறவே ஒழித்திட வேண்டும்.

- கூட்டணிக் கட்சிகளின் உடனான பிரச்சினையை உடனடியாக சரி செய்தல் வேண்டும்.

- வாரிசு அரசியல் என்ற நிலையைத் தடுக்க ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு பதவியில் இருக்க வேண்டும்.

- அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் நிறுவன அமைப்புகளை மறு சீரமைத்து சரிப்படுத்த வேண்டும்.

- காங்கிரஸ் தலைவர் மற்றும் காரியக் கமிட்டி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் நிலையான கால அளவிலான பதவியை நிர்ணயிக்க வேண்டும்.

- பதினைந்தாயிரம் அடி மட்ட தலைவர்களை கண்டறிந்து அவர்களை பொறுப்பில் அமர வைத்து ஈடுபடுத்துவதன் மூலம் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட முடியும்.

- மேலும் ஒரு கோடி அளவிலான காங்கிரஸ் தொண்டர்களை களப் பணியில் ஈடுபட வைத்தல்.

இப்படி காங்கிரஸ் கட்சிக்கு இமாலய வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கட்சியில் இருக்கும் கோஷ்டி பூசல்கள் தலைமைக்கும், நிர்வாகிகளுக்குமான இடைவெளி, மாநில அளவிலான பிரச்சினைகள், கூட்டணி கட்சிகளுடன் உரசல்கள் என அழிவின் விளிம்பில் கூட இல்லை கிட்டத்தட்ட அழிந்துவிட்ட காங்கிரசுக்கு ஏதாவது செய்து புத்துயிர் ஊட்ட முடியுமா என பிரசாந்த் கிஷோர் வியுகம் வகுத்துக்கொடுத்ததாக தெரிகிறது. இதனை நேரு குடும்ப வாரிசுகள் எப்படி அமல்படுத்துகின்றனர் என்பதை பொறுத்தே காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News