Kathir News
Begin typing your search above and press return to search.

ஆங்கிலேய ஆட்சியை மிக கடுமையாக எதிர்த்த சுப்ரமணிய சிவா நினைவு தினத்தில் அவரை பற்றி காண்போம்!

ஆங்கிலேய ஆட்சியை மிக கடுமையாக எதிர்த்த சுப்ரமணிய சிவா நினைவு தினத்தில் அவரை பற்றி காண்போம்!

ThangaveluBy : Thangavelu

  |  23 July 2022 10:51 AM GMT

பாரத அன்னையின் தவப்புதல்வரான சுப்ரமணிய சிவா தியாகத்தின் மறு உருவம் என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து தென்னகத்தில் தேசபக்தியை ஊட்டிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவம், மகாகவி பாரதியாரால் ''வீரமுரசு'' என்று புகழப்பட்டவர்.

தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள வத்தலக்குண்டு என்ற ஊரில் 4.10.1884ம் ஆண்டு ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். அவருடைய இளமை காலம் முழுவதும் வருமையிலேயே சென்றது. பள்ளிப் படிப்பு மதுரை, கோவை மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் முடித்தார். அந்த காலக்கட்டத்தில் இவரது தேச பக்தி அம்பத் தொடங்கியது.

கடந்த 1899ம் ஆண்டு இவருக்கும், மீனாட்சியம்மாள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் நுழைந்தாலும் தேச சேவையிலிருந்து நொடிப் பொழுதுகூட விலகவில்லை. அதன்படி கடந்த 1906ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தில் தன்னை இணைத்து கொண்டு பல சொற்பொழிவுகளை கேட்க சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதனின் நோக்கமே இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவே நோக்கமாகும்.

இதனால் திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர், ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தார். இதனால் கைது செய்யப்பட்ட சுப்ரமணிய சிவா சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் 1912ம் ஆண்டு விடுதலை அடைந்த அவர், விடுதலையானார். அதன் பின்னர் அங்கேயே குடிபெயர்ந்தாலும் சென்னை வாழ்க்கை மிகவும் நெருக்கடியிலேயே கழிந்தது.

இந்நிலையில், சிவாவின் மனைவி மீனாட்சியம்மாள் உடல்நிலை மோசமாகி 1915ம் ஆண்டு சென்னையில் காலமானார். மனைவி இறந்த பின்னர் சிவாவின் சுற்றுப் பயணங்கள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பொதுமக்களிடம் தேச உணர்வை அதிகரித்தார். பொதுகூட்டங்களை தவிர்த்து மக்கள் உள்ள இடங்களில் சென்று உரையாற்றினார்.

மேலும், கடந்த 1919ம் ஆண்டு இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்களின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் செலுத்தி அவர்களுக்காக அயராது உழைத்து வந்தார்.

1920-ம் ஆண்டு கொல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார். அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம்.

அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர். காந்தியத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிர தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு பேசுவதற்கு தடைவிதித்தது.

மேலும், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 1923ம் ஆண்டில் பாரத மாதாவிற்கு ஆலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து சிவா மறுபடியும் மூன்றாவது முறையாக சிறை செல்வதற்கு நேரிட்டது. அப்போது ஒரு ஆண்டு சிறைவாசம் இருந்தார். அது பற்றிய வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் அதிலிருந்து விடுதலை ஆனார். இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ரயிலில் பயணம் செய்வதற்கு தடை விதித்தது.

இதனை பொருட்படுத்தாமல் மதுரையிலிருந்து தன்னுடைய உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டிக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்தார். இவர் வயதானவர்கள் இல்லை என்றாலும் வியாதி மற்றும் ஆங்கில அரசின் அடக்குமுறையால் கால்நடைப் பயணம் ஆகியவற்றில் சோர்ந்து போனார். நாளடைவில் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்திற்காக முன்னின்று போராடிய காங்கிரசும் சரி இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் நொந்துபோன சிவ 23.07.1925ம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்து விண்ணுலகத்திற்கு சென்றார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடனேயே மறைந்து விட்டார்.

சுந்தர், கட்டுரையாளர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News