Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க-வின் விளம்பர அறிவிப்பா? ஓசூர் பன்னாட்டு விமான நிலையம்.. 2033-ல் தான் சாத்தியம்.. முழு விவரம்..

தி.மு.க-வின் விளம்பர அறிவிப்பா? ஓசூர் பன்னாட்டு விமான நிலையம்.. 2033-ல் தான் சாத்தியம்.. முழு விவரம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Jun 2024 6:31 AM GMT

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7வது நாள் அமர்வில், ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என கூறி உள்ளார். ஆனால் இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வலுவாக இருக்கிறது. குறிப்பாக இது நடைமுறையில் சாத்தியமா? என்பது குறித்தான தகவல்களை தற்போது பார்க்கலாம்.


ஆரம்ப சுழி 2022-ஆம் ஆண்டு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இதுகுறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர்(MP) வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய தினத்தின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K.சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

உடான் திட்டத்தின் கீழ் சத்தியம் இல்லை:

இதுதொடர்பாக அவர் கூறும் போது, இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.


2033ஆம் ஆண்டு தான் சாத்தியம்:

அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பிறகு ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறி இருந்தார். ஏற்கனவே இது தொடர்பான விளக்கங்கள் மத்திய அமைச்சகத்திடமிருந்து கொடுக்கப்பட்டு தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மத்திய அரசுக்கும் பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் இடையே செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தத்தின் காலம் 25 ஆண்டுகளாகும். இந்த ஒப்பந்தம் முடிவடையும் காலம் 2033 ஆம் ஆண்டு தான். எனவே அதன் பிறகு வேண்டுமானால், பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையமும், புதிய ஓசூர் விமான நிலையமும் இயங்கத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


அரைகுறையாக நிற்கும் பழைய வாக்குறுதிகள்:

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை ஆகும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுகவை கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News