Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கு பார்த்தாலும் சனாதன தர்மம் தான்... கதறலை தொடங்கிய கம்யூனிஸ்ட் MP சு.வெங்கடேசன்...

எங்கு பார்த்தாலும் சனாதன தர்மம் தான்... கதறலை தொடங்கிய கம்யூனிஸ்ட் MP சு.வெங்கடேசன்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Jun 2023 3:23 AM GMT

இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. 2023 மே 28-ந் தேதி, பிரதமர் மோடி இந்தியாவின் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறார்.


ரூ.850 கோடிக்கும் மேலாக செலவிட்டு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும், கூட்டுக்கூட்டத்தில் 1,272 பேரும் அமரவும் இருக்கை வசதியுடன் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. அரசியல் சாசன மண்டபம், உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், நூலகம், நிலைக்குழு விசாரணை அறைகள், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் என இந்த நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. 65 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் போதுமான அளவுக்கு இடவசதியும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் பல வசதிகள் உள்ளன.


தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும். செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் பங்களிப்பில் செங்கோல் உருவாக்கப்பட்டது. இப்படி பல்வேறு பெருமைகளை வாய்ந்த செங்கோல் தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. மேலும் தமிழகத்தின் செங்கோல் வைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் மற்றும் இடதுசாரிகளும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்கள்.


ஆனால், மத்திய அரசு இதை காதில் போட்டுக் கொள்ளாமல் திறப்பு விழாவை நல்லபடியாக முடித்து இருக்கிறது பாஜக தலைமையிலான அரசாங்கம். இந்நிலையில் நாடாளுமன்ற திறப்பு விழா முடிந்ததும் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் புதிய நாடாளுமன்றத்தை பற்றி கருத்தை பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது, இது பற்றி அவர் கூறும் பொழுது, "புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை.


நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை?கட்டடத்தின் நடுவில் சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. பாடபுத்தகங்களில் இருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும்.


அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளதாக சொல்லப்பட்டு அதற்கு நேர் எதிரான கருத்துகளைக் காட்சிப் படுத்தியுள்ளனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக் கொண்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது" என்ற கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.


இப்படி கடவுள் மறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு போன்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி இப்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் சனாதன தர்மம் நிறைந்திருக்கிறது என்று கூறியிருப்பது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News