Kathir News
Begin typing your search above and press return to search.

தூய்மை பணியாளருக்காக குரல் கொடுத்து இன்று சிறையில் இருக்கும் SG சூர்யா!

தூய்மை பணியாளருக்காக குரல் கொடுத்து இன்று சிறையில் இருக்கும் SG சூர்யா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jun 2023 3:14 AM GMT

தமிழக அரசியலில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைது நடவடிக்கை இருந்து வருகிறது. பாஜக மாநில செயலாளராக இருக்கும் SG சூர்யா அவர்கள் கடந்த ஏழாம் தேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மலம் அள்ளுபவர்களின் மரணத்திற்கு எதிராக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

ஆனால் அதில் கடலூர் என்பதை குறிப்பிடுவதற்கு பதிலாக மதுரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது தான் தவறாக கருதப்பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருந்த செய்தி முற்றிலும் உண்மைதான், அதை யாரும் மறுப்பதற்கு இடம் இல்லை. குறிப்பாக கடலூர் பெண்ணாடம் பேரூராட்சி பன்னிரண்டாவது வார்டு உறுப்பினராக விசுவநாதன் என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் தூய்மை பணியாளரை மலம் கலந்த நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும் அதனால் வேலை செய்தவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட அவர் உயிரிழந்த ஒரு சம்பவமும் பரபரப்பில் ஏற்படுத்தியது.


சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் எனவும் இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பதற்றமும், அச்சமும் ஏற்பட்டு உள்ளது என்றும் இதனை கண்டு கொள்ளாமல் மூடி மறைக்க மேலிடம் முயற்சி செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியவுடன், உடனடியாக இந்த செய்தியை கையில் எடுத்த SG சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பகிர்ந்து இருக்கிறார்.


பகிர்ந்து மட்டுமல்லாமல் உங்கள் கட்சி கவுன்சிலரால்தான் இது நிகழ்ந்தது எங்கே உங்கள் புரட்சி என மதுரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் அவர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார். தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை இப்படி நடந்து கொள்ளலாமா? அதை நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்பது போன்று தொடர் கேள்விகளையும் அந்த அறிக்கையில் எழுப்பி இருந்தார்.


இந்த ஒரு அறிக்கை காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12ஆம் தேதி மதுரை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அவர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தான் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக இரவோடு இரவாக சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முயற்சி செய்து இருக்கிறார்கள்.


அது மட்டுமில்ல SG சூர்யா கைது குறித்து முறையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தமிழக பாஜகவை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி ஈவேரா சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த ஒரு கைது நடவடிக்கைக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் CT. ரவி BL.சந்தோஷ் ஆகியோரும் தன்னுடைய கண்டன பதிவை பதிவு செய்து இருக்கிறார்கள். இப்படி தூய்மை பணியாளர் இறப்பிற்காக SG சூர்யா குரல் கொடுத்ததும், அதன் விளைவாக தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதும் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தூய்மை பணியாளருக்காக குரல் கொடுத்தது தப்பா என ஆளும் திமுக அரசு மற்றும் எம்.பி வெங்கடேசனை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் வாரங்களில் சிறையில் இருக்கும் SG சூர்யாவிற்கு ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக தரப்பில் முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறையில் SG சூர்யா நலமாக இருக்கிறார் என அவரை பார்த்து வந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News