ஸ்மார்ட்போன் விடீயோக்களில் சீனாவின் கொரானா குற்றங்கள்: மரணப்படுக்கையில் பத்திரிகையாளர் !
மே 2020ல் ஜாங் ஷான் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டார்.
![ஸ்மார்ட்போன் விடீயோக்களில் சீனாவின் கொரானா குற்றங்கள்: மரணப்படுக்கையில் பத்திரிகையாளர் ! ஸ்மார்ட்போன் விடீயோக்களில் சீனாவின் கொரானா குற்றங்கள்: மரணப்படுக்கையில் பத்திரிகையாளர் !](https://kathir.news/h-upload/2021/11/08/1223914-zhangzhan.webp)
ஜாங் ஷான் என்ற 38 வயது முன்னாள் வழக்கறிஞர், ஒரு குடிமகன் பத்திரிகையாளராக (citizen journalist) பிப்ரவரி 2020ல் சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டார். கொரானா பெருந்தொற்றின் அப்போதைய மையமாக இருந்த வுஹானின் குழப்பங்களின் மீது அறிக்கை தயாரிக்க தொடங்கினார். கொரானா பரவலை கட்டுப்படுத்த அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்து, அது குறித்து தனது ஸ்மார்ட் போன் விடியோக்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பினார்.
மே 2020ல் ஜாங் ஷான் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். டிசம்பர் மாதத்தில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக்கு காரணமாக அவர், "சண்டை பிடித்ததாகவும், பிரச்சினைகளை தேடிக்கொண்டதாகவும்" கூறப்பட்டது. ஆட்சிக்கு எதிராக கேள்வி எழுப்புவர்களின் குரல்களை ஒடுக்க வழக்கமாக பயன்படுத்தப்படும் காரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை விடுவிக்கக்கோரி பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன, இந்நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஜான் ஷாங் உண்ணா விரதப் போராட்டம் நடத்தத் தொடங்கினார். அவருடைய விடுதலைக்கு சீன அரசாங்கம் மறுத்து விட்டதால், அவரது உண்ணா விரதம் தொடர்ந்தது. இதனையடுத்து, அவர் மரணப்படுக்கையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மிகக் குறைந்த எடையில் இருப்பதாகவும், இது தொடந்தால் அவர் அதிக காலம் உயிர் வாழ மாட்டார் எனவும் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், வுஹானிற்கு 2020 மார்ச்சில் சென்ற முன்னாள் பொது பாதுகாப்பு அதிகாரி சன் லீஜுன் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அரசுப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில் இருந்த இவர், வுகானிற்கு 2020 மார்ச்சில் அனுப்பப்பட்ட உயர்மட்டக் குழுவில் ஒருவர். தன்னுடைய பணியை செய்யாமல் தப்பித்து சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த செப்டெம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
முக்கியமான ஆவணங்களைக் கொண்டிருந்த அவர், சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதாகவும் ஆரம்ப கால அறிக்கைகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்டைப் படம் நன்றி: amnesty.org