Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து தர்மத்தைப் பற்றி மோகன் சி லாசரஸ் பேசலாமா?

இந்து தர்மத்தைப் பற்றி மோகன் சி லாசரஸ் பேசலாமா?

Mission KaaliBy : Mission Kaali

  |  17 Oct 2021 2:40 AM GMT

'இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் பெரிய பெரிய கோயில்கள் – சாத்தானின் அரண்கள் உள்ளது. கும்பகோணத்திற்குப் போனால் நாம் கிரகிக்க முடியாத அளவுக்கு அத்தனை கோயில்கள் சாத்தான் வேரூண்றியிருக்கிறான். திருத்தனியில் சாத்தான் குடியிருக்கிறான்'

சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஸ்தவ மத(வெறி) போதகரான மோகன் சி.லாசரஸ் உதிர்த்த வார்த்தை மணிகள் இவை!

அப்போதே மோகன் சி.லாசரஸின் இந்த வீடியோ சமூகவலைதளங்களி வைரலாக பரப்பப்பட்டு பொது மக்களிடையே கடும் கண்டத்தை எழுப்பியது. மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிய மோகன் சி லாசரஸை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மற்றும் 'இந்து முன்னனி' போன்ற இயக்கங்கள் விவகாரத்தை நீதிமன்றம்வரை இழுத்துச் செல்ல, வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டார் லாஸரஸ்.

அதில், 'நான் சொன்ன கருத்து தவறாக பேசவில்லை. ஒரு மணிநேர வீடியோவை இடையில் கட்செய்து வெளியிட்டதால், அதன் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது' என்று சால்ஜாப்பினார்.

திருக் கோயில்களை சாத்தான்களின் அரண் என்றும், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று சொன்ன கருத்து எப்படி திரிக்கப்பட்ட கருத்தாக இருக்கும்? என்ற இந்துக்களின் எதிர் கேள்விக்கு இதுவரை மோகன் சி. லாசரசிடமிருந்து பதில் வரவில்லை.

அதற்குள் தற்போது மோகன் சி. லாசரஸின் இன்னொறு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Twitter

அதில் இந்தியா ஏழை நாடாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் உருவ வழிபாடும், விபச்சாரமும்தான். பைபிளின் கடவுள் விக்கிரக வழிபாடு, விபச்சாரம் நடக்கும் நாட்டை சபித்ததாலேயே நமது நாடு இப்படி உள்ளது என்று கூறியிருந்தார்.

முன்பை விட கேவலமாக மோகன் சி.லாசரஸ் பேசியிருப்பது இந்துக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக இந்து தர்மத்தை விபச்சாரத்துடன் மோகன் சி.லாசரஸ் ஒப்பிட்டு பேசியிருப்பது கடும் கண்டனக் குரல்களை பல திசைகளிலிருந்தும் கொண்டுவரத்தொடங்கியுள்ளது.

இந்து மதத்தை கேவலமாக பேசுவது… பின்பு இந்துக்கள் கொந்தளித்து நிலைமை மோசமானால் மன்னிப்பு கேட்பது மோகன் சி.லாசரஸுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்த நேரத்தில் மிஷன் காளி மோகன் சி. லாசரஸுக்கு சில விளக்கங்களை தரவேண்டியிருக்கிறது.

உலகத்திலேயே தனி மனித ஒழுக்கம் மற்றும் சமூக நல்லொழுக்கத்தை போதிக்கும் ஒரே தர்மம் இந்து தர்மம் மட்டுமே! ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம், அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஈவது விலகேல் என்று பழந்தமிழிலேயே தர்ம கருத்துக்களை போதனை செய்து அதைப் பின்பற்றியவர்கள் இந்துக்கள்.

மேற்கத்திய கலாச்சாரம் பெண்களை ஒரு போகப் பொருளாக பார்த்து வந்த நேரத்தில், இந்துக்களின் ராமாயண மகா காவியம் பெண்களைப் போலவே ஆண்களும் கற்பு நெறியோடு வாழவேண்டும் என்று போதித்தது. எதிர்த்து நிற்பவது தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக குருவாக, குலப் பெரியவராக இருந்தாலும் தர்மத்திற்கு எதிராக செயல்பட்டால் கர்மத்தை செய்யவேண்டும் என்று போதிக்கிறது மகாபாரதம்.

இப்படிப்பட்ட அறத்தையே இந்து தர்மம், உலக சமூகத்திற்கு போதனை செய்து வந்துள்ளது.

அப்படிப்பட்ட தர்மத்தை, விபச்சாரத்தோடு மோகன் சி. லாசரஸ் ஒப்பிட்டுப் பேசியிருப்பது அவரின் முட்டாள்த் தனத்தையே காட்டுகிறது.

சரி… இந்த நேரத்தில் மோகன் சி. லாசரஸ் மிகவும் நேசிக்கும் கிருஸ்தவ மதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

கிருஸ்தவர்களைப் பொருத்தவரை 'ஆபிரஹாம்' என்பவர் அவர்களுக்கு மிக முக்கியமான இறைவாக்கினர். அந்த ஆபிரஹாமின் மனைவியின் பெயர் சாரா! உண்மையில் இந்த சாரா யார் தெரியுமா? ஆபிரஹாமின் சகோதரி! ஆம். கிருஸ்தவர்கள் பெரிதும் போற்றும் இறைவாக்கினரான ஆபிரஹாம் அவரின் சொந்த சகோதரியைத்தான் திருமணம் செய்து மனைவியாக்கி வைத்திருந்தார். சகோதரியை மணந்துக்கொண்டவரைத்தான் பைபிளின் கர்த்தராகிய ஆண்டவர் தேர்ந்தெடுத்து அருள் வழங்கியதாகச் சொல்கிறது பைபிள்.

மோகன் சி.லாசரஸ்… உங்களது மதம் போற்றும் மூதாதையர் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா? தகாத உறவு, விபச்சாரத்தை விட கேவலமான காரியம் அல்லவா? அதைத்தானே அவர் செய்துள்ளார்?

அப்படிப்பட்டவருக்குத்தானே பைபிளின் கடவுள் தனது முழு அருளாசியையும் வழங்கியிருக்கிறார்?




அதுமட்டுமா?

ஆபிரஹாம், அவர் வசித்து வந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டதால் சாராவைக் கூட்டிக்கொண்டு எகிப்து செல்ல நேர்ந்தது. அப்போது, சாராவிடம் 'நீ மிகவும் அழகானப் பெண். நான் உன் கணவன் என்று தெரிந்தால் என்னை கொலை செய்து உன்னைத் தூக்கிச்சென்றுவிடுவார்கள்.

உன்னால் எனக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக, எகிப்தில் நீ எனது சகோதரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்' என்கிறார்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. 'உன்னால் எனக்கு நல்லது நடக்கவேண்டும்' என்பதற்காக நீ எனக்கு சகோதரி என்று சொல் என்கிறார் ஆபிரஹாம். அப்படியென்றால் சாராவிடம் அவர் எதிர்பார்த்த நல்லது என்ன?

அதற்கு பைபிளிலேயே பதில் உள்ளது.

எகிப்துக்குள் ஆபிரஹாமும், சாராவும் நுழைந்தும், எதிர்பார்த்தது போலவே சாராவின் அழகு பாரோ மன்னனின் கவனத்தை ஈர்க்கிறது. சாரா எகிப்து அரசனுக்கு முன்பு அழைத்து வரப்படுகிறாள். அப்போது சாரா, எகிப்து அரசனிடம் ஆபிரஹாமை தனது சகோதரன் என்றே அறிமுகப்படுத்துகிறாள். மேலும் ஆபிரஹாமுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் வேலைக்காரர்களையும் கொடுக்க வைக்கிறாள்.

அதாவது ஆபிரஹாம் கேட்டுக்கொண்டதுப் போல, சாரா அவனுக்கு 'நல்லது' நடத்திக்கொடுக்கிறாள்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், 'சாராவை அழைத்துக்கொண்டு எகிப்துக்குச் சென்றால், சாராவை அடைவதற்காக நிச்சயம் தன்னை கொன்று விடுவார்கள். அதற்குப் பதிலாக சாராவை தனது சகோதரி என்று சொல்லிவிட்டால், அவள் மூலமாக தனக்கு ஏதாவது சொத்து கிடைக்கும்.' என்பதே ஆபிரஹாமின் பிளான்!

வடிவேலு பாணியில் சொல்லப்போனால் அக்காவை அனுப்பி, பேக்கரி வாங்கிய கதையைப் போல தனது மனைவியை பாரோ மன்னனிடம் அனுப்பிவிட்டு, பதிலுக்கு ஆடு, மாடு, கழுதைகளை வாங்கி விபச்சாரம் செய்தவர்தான் ஆபிரஹாம்.

ஆதாரம் : தொடக்கநூல் – அத்தியாயம் 12, வசனம் : 12 -16

12 எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது "இவள் அவனுடைய மனைவி" எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.

13 உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு" என்றார்.✠

14 ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.

15 பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

16 அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்; ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.

அப்படிப்பட்ட ஆபிரகாமைத்தான் புனிதராக கருதுகிறார்கள் கிருஸ்தவர்கள். பைபிளில் வரும் ஆபிரஹாமை முன்மாதிரியாக யாராவது எடுத்துக்கொண்டால் நிச்சயம் அவரது குடும்பப் பெண்கள் கற்பு நெறியுடன் வாழ முடியாது. ஆனால் அப்படிப்பட்டவருக்குத்தான் பைபிளின் கடவுள் அருள் கொடுத்தார்.

பைபிளின் பல இடங்களில் நான் ஆபிரஹாமின் கடவுள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார் பைபிளின் கடவுள்!

அந்த ஆபிரஹாமின் சந்ததியில் வந்தவர்தான் இயேசு! அவரைத்தான் கிருஸ்தவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்! விபச்சார சந்ததியை, கதையைப் பின்பற்றி வாழ்பவர்கள் யார்?

ஒருவர் எதைப் பார்க்கிறாரோ… எதை நினைத்துக்கொண்டிருக்கிறாரோ அவர் அதுவாகவே ஆகிறார். மோகன் சி.லாசரஸ் பைபிளின் கதைகளை நிறைய படித்துவிட்டார் போல. அதனால் தாங்கள் மதிக்கும் இஸ்ரேலிய ஜாதிக் கூட்டத்தைப் போலவே இந்துக்களும் இருப்பார்கள் என்று நினைதிருக்க வாய்ப்புண்டு. அதனால்தான் இப்படி முட்டாள்தனமாக பேசி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News