தேசிய இளைஞர் தினம்' - சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்.!
தேசிய இளைஞர் தினம்' - சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்.!
![தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்.! தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/efe598f8a654442f5acb0ef4c3688272.jpg)
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த முறை கொரானா வைரஸ் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் கடந்த ஆண்டுவரை இந்த தினம் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஊர்வலங்கள், உரைகள், இசை, கருத்தரங்குகள் அவற்றின் மூலம் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
நம் நாடு சிறப்பான நிலையை அடைவதற்கு இளைஞர்களின் முக்கியத்துவத்தை தனது எண்ணங்களின் மூலமாகவும் செயல்களின் மூலமாகவும் துறவியான விவேகானந்தர் வெளிப்படுத்தினார். தேசத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு குழந்தையும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இளைஞர்களின் திறனை பயன்படுத்துவதில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.
வசதியான சூழலில் இருந்து வெளியேறி தாங்கள் விரும்பும் அனைத்தையும் கல்வியாலும் அமைதியாலும் பெறமுடியும் என்பதை அவர் காட்டினார். ஒரு தேசத்தை முன்னேற்றுவதில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் மக்களை மேம்படுத்துவதற்காக கல்வியையே முதன்மை வழி என்று நினைத்தார்.
தத்துவம், மதம், இலக்கியம், வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் நம்பமுடியாத அளவிற்கு புரிதலும் அறிவும் இருந்தது.
அவருடைய பல மேற்கோள்கள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
* இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து சக்திகளும் நம்முடையது தான். ஆனால் நாம்தான் நம் கண்முன்னே கைகளை வைத்துக் கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம்.
* விழித்திரு.! எழுந்திரு.! இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம்
* நம்முடைய எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வார்த்தைகள் இரண்டாம் பட்சம். எண்ணங்கள்தான் வாழ்கின்றன. அவைதான் நீண்ட தூரம் பிரயாணம் செய்கின்றன.
* உயர்ந்த எண்ணங்கள், மேம்பட்ட லட்சியங்கள் ஆகியவற்றை கொண்டு உங்கள் மனதை நிரப்புங்கள். அதன் வழியாக சிறந்த செயல்பாடுகள் வெளிவரும்.
* உங்களில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை கடவுளில் உங்களால் நம்பிக்கை கொள்ள முடியாது.
* உங்கள் மனதில் ஒரு யோசனை தனித்துவமாக நிரம்பி இருக்கும் பொழுது, அது ஒரு செயல்பாடாக உருவெடுக்கிறது.
1984 முதல் தேசிய இளைஞர் தினம் இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.