Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் மக்கள் மருந்தகம்.. தமிழகம் எங்கும் திறக்கும் தி.மு.க அரசு..

மத்திய அரசின் மக்கள் மருந்தகம்.. தமிழகம் எங்கும் திறக்கும் தி.மு.க அரசு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Jun 2024 10:16 AM GMT

பிரதமரின் மக்கள் மருந்தகம்:

பிரதமரின் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா - PMBJP) என்பது இந்திய நாட்டின் மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விற்பதற்காக இந்திய அரசின் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இவை பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா கேந்திரா (PMBJK) என்றழைக்கப்படும் மக்கள் மருந்தகத்தின் மூலம் விற்பனையில் ஈடுபடுகின்றன. பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம், மருந்தகக் கடைகளில் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.


சந்தை விலையைவிட இங்கு மருந்துகளின் விலை 50% முதல் 90% வரை குறைவு:

மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை, சந்தை விலையைவிட 50% முதல் 90% வரை குறைவாக இருப்பதாக பிரதமர் கூறினார். உதாரணமாக, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்து, சந்தையில் ரூ.6,500-க்கு விற்கப்படும் நிலையில், மக்கள் மருந்தகம் மையங்களில் ரூ.800-க்கே கிடைக்கிறது. இதற்கு முன்னதாக இருந்ததைவிட, தற்போது, சிகிச்சைக்கான செலவு குறைந்துள்ளது. மக்கள் மருந்தகங்களால் நாடு முழுவதும் இதுவரை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் ரூ.2,200 கோடியை சேமித்துள்ளனர்.


தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் 20 மக்கள் மருந்தகம்:

தமிழக கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 380 மருந்தகங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மருந்து, மாத்திரைகள், 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. மேலும் ஆங்கிலேய மருந்துக்கள் பிரதமரின் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 துவக்க, கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் செய்தி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். மக்கள் மருந்தகத்தில் விற்பனை செய்யும் ஜெனரிக் வகை மருந்துகள், மத்திய அரசு அனுமதித்த டீலர்களிடம் இருந்து வாங்கப்படும் என்பதால், மிகக் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் மக்களுக்கு கிடைக்கும். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறை சார்பில் மக்கள் மருந்தகம் அமைப்பதற்கு தேவையான இட வசதிகள் தொடர்பான விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.


ஒரு மாவட்டம் ஒரு மக்கள் மருந்தகம்:

நீலகிரி மாவட்டத்தில் கூடலுாரில் ஒரு இடமும், ஊட்டியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் இடம் கண்டறிந்து, மக்கள் மருந்தகங்கள் விரைந்து துவக்கப்படும். மற்ற மாவட்டங்களிலும் இதே போன்று இடத்தை சரியான முறையில் தேர்வு செய்து கொடுத்தால் மக்கள் மருந்தகம் எளிய விலையில் மக்களை சென்று அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இதற்கு தற்போது இருக்கும் திமுக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News