Kathir News
Begin typing your search above and press return to search.

அமலுக்கு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்... முழு விவரமும், சிறப்பம்சமும்...

அமலுக்கு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்... முழு விவரமும், சிறப்பம்சமும்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 July 2024 6:28 AM GMT

அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள்:

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பா.ஜ.க அரசு அமைந்திருக்கும் நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் 2024, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இச்சட்டங்கள் குறித்து ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 5.65 லட்சம் காவலா்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் கிடையாது மத்திய உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலில் 1,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) சாா்பிலும் 9,000 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ சாா்பிலும் புதிய சட்டங்கள் பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டத்தின் தேவை என்ன?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும். நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற பழைமையான சட்டங்களை மாற்றி நிகழ்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்ய குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைக்க மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பாரதிய நியாய சம்ஹிதா(பி.என்.எஸ்) மசோதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷ சம்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்) மசோதா 2023, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் (பி.எஸ்) மசோதா 2023 ஆகிய இந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் 2024, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.


இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும், மொழிபெயர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் முடிவடையும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பணி முடிந்ததும், தமிழ்ப் பதிப்பு, ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களின் உண்மையான மொழிபெயர்ப்பாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சான்றிதழ் பெற்ற பிறகு, இன்னும் சில தினங்களில் அரசு மொழிபெயர்த்த தமிழ் பதிப்பு மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன.


புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது புதிய குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

  • புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.
  • சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்.
  • ஒரு வழக்கை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே நீதிமன்றம் ஒத்தி வைக்க முடியும்.
  • புதிய சட்டங்களின் கீழ், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக செல்லாமலேயே, மின்னணு தகவல் தொடர்பு வாயிலாக புகாரளிக்கலாம்.
  • பூஜ்ய எப்.ஐ.ஆர்., அறிமுகப்படுத்தப் பட்டதன் வாயிலாக, ஒருவர் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும், எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம்.
  • போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகவல்களை பதிவு செய்த இரு மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
  • சம்மன்களை மின்னணு முறையில் வழங்கலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க, சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதிகபட்சம் இரு முறை வழக்குகளை நீதிமன்றம் ஒத்தி வைக்கலாம்.
  • பெண்கள், 15 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லது கடுமையான நோய் உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்தில் காவல் உதவியைப் பெறலாம். இது மட்டும் கிடையாது இன்னும் பல முக்கிய சிறப்பம்சங்களும் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக 150 ஆண்டுகளாக பழமையான ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றாற்போல் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு, பிரதம நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News