சிரித்த முகம், பெருத்த வயிறு லாபிங் புத்தா உண்மையில் அதிர்ஷ்டத்தை ஈர்பவரா?
![சிரித்த முகம், பெருத்த வயிறு லாபிங் புத்தா உண்மையில் அதிர்ஷ்டத்தை ஈர்பவரா? சிரித்த முகம், பெருத்த வயிறு லாபிங் புத்தா உண்மையில் அதிர்ஷ்டத்தை ஈர்பவரா?](https://kathir.news/h-upload/2022/03/31/1343367-screenshot20220325070915.webp)
நம்மில் பலர் சிரிக்கும் புத்தா என அழைக்கப்படும் ஒரு சிலையை வீட்டில், காரில், தொழில் இடங்களில் வைத்து பார்த்திருப்போம். இது ஒரு அலங்கார பொருள் என்பதை தாண்டி, சிரிக்கும் புத்தரை வீட்டினில் வைப்பதால் நல்ல அதிர்வுகள் கூடுகின்றன எனவும் சொல்லப்படுவதுண்டு.
இந்த சிரிக்கும் புத்தரின் இயற் பெயர் ஹோட்டேய் அல்லது பு-டெய் இவரை பெரும்பாலும் சிரிக்கும் புத்தர் என்றே அழைக்கபடுவது வழக்கம். இவர் வாழ்ந்த காலத்தில் இவர் ஒரு விநோத துறவியாக இருந்து வந்துள்ளார். சீன மற்றும் சின்டோ கலாச்சாரத்தின் மிக முக்கிய துறவியாக 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டவர் இவர். இவர் போதிஸ்த்தவா என்பவரின் அவதாரம் எனவும் அம்மக்கள் நம்புகின்றனர். இவருடைய உருவ அமைப்பு இயல்பாகவே இவருக்கு சிரிக்கும் புத்தர் என்ற பெயரை வழங்கியுள்ளது.
வாய்விட்டு சிரித்து, பெருவயிறுடன் இவர் காட்சி தருவது அபரீமிதத்தின் குறியீடாக சிலர் கருதுகின்றனர். அதாவது நன்மை, அமைதி, செல்வம் அனைத்தும் அபரிமீதமாக ஒருவருக்கு கிடைக்கும் என்பது இவரின் உருவத்தை ஒட்டி சொல்லப்படும் தார்ப்பரியம். மேலும் கையில் நிரம்பி வழியும் மூட்டை ஒன்றையும் சுமந்த வாறு சில இடங்களில் காட்சி தருகிறார். அந்த மூட்டையில் பொன்னும், பொருளும், குழந்தைகளுக்கான பரிசுப்பொருட்களும் நிரம்பியிருக்கின்றன எனவும் சொல்லப்படுகிறது.
பலவிதமான வடிவில் இவருடைய வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சிற்பத்தில், கையில் காலி கிண்ணத்துடன் இருப்பார், ஒரு சிலவற்றில் விசிறியுடன் இருப்பார். இந்த விசிறி வேண்டியதை தரக்கூடிய விசிறி என சொல்லப்படுகிறது. மொத்தத்தில் மக்களின் துயரை துடைக்கும் விதமாக இவருடைய உருவ அமைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடினமான வார்த்தைகளால், புரியாத தத்துவ போதனைகளால் மனிதர்களுக்கு ஞானத்தை வழங்க பலர் முயற்சித்த போது, தன்னுடைய சிரிப்பால் மட்டுமே மக்களுக்குள் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர். தான் ஒரு துறவி என்பதை பிரகடனப்படுத்தாமல், உட்சபட்ச துறவு நிலையில் வாழந்தவர். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளில் இவர் சிரித்தார், நாடுகள் கடந்து, தேசங்கள் கடந்து, எல்லா இடங்களிலும் சிரித்தார். இவருடைய தொந்தி குலுங்க இவர் சிரித்த சிரிப்பை கண்டு மக்கள் இயல்பாகவே சிரிக்க துவங்கினார்ர். ஒரு தொற்று போல சிரிப்பும் மகிழ்ச்சியும் எல்லா இடங்களிலும் பரவியது. இதனாலேயே இவரை மக்கள் சிரிக்கும் புத்தர் என அழைத்தனர்.
அந்த வகையில் பெங்க்சூ வாஸ்துவின் படி இவரை வைத்தால் செல்வம் சேரும் என சொல்லப்படுகிறது. அதன் உண்மை தன்மையை ஆராய்வதை விடுத்து, அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்வுடன் ஆர்பரிப்பது பெரும் செல்வம் தான். அந்த ஆனந்தம் எனும் பெரும் செல்வத்தை சிரிக்கும் புத்தர் நிச்சயம் அருளுவார்.