Kathir News
Begin typing your search above and press return to search.

ராமரோடு வனவாசம் சென்ற சீதையை போல் இலக்குவரோடு ஏன் ஊர்மிளை செல்லவில்லை?

ராமரோடு வனவாசம் சென்ற சீதையை போல் இலக்குவரோடு ஏன் ஊர்மிளை செல்லவில்லை?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  12 April 2022 1:42 AM GMT

இராமாயணம் என்ற காப்பியத்தின் பெயரை கேட்டாலே நம் நினைவிற்கு வருவது ராமரும், சீதையும் அவர்களை தொடர்ந்து பலரை நாம் நினைவுக்கூரலாம். ஆனால் ராமயணம் போன்ற காப்பியத்தில் இணையாக நாம் போற்றி துதிக்க வேண்டியவர்கள் பலருண்டு.

அதில் முக்கியமானவர்கள் இலட்சுமணனும் ஊர்மிளையும். இலட்சுமணர் அவருடைய சகோதர பாசத்தாலும், அவராற்றிய தியாகத்தாலும் போற்றப்படுபவர். ஆனால் அவருடைய இல்லாளான ஊர்மிளையின் தியாகம் பெரிதாக பேசப்படுவதில்லை. சீதை வனவாசம் முடிந்து நாடு திரும்பிய போது ஊர்மிளை செய்த தியாகத்தை கண்டு "நீ ஆயிரம் சீதைக்கு சமமானவள்" என வியந்து போற்றினாராம். அவ்வகையில் ஊர்மிளை செய்தது என்ன?

தசரதருக்கும், சுமித்ரைக்கும் பிறந்த மைந்தரான லட்சுமணர், தன் அண்ணனும், தாயுக்கு இணையான சீதா தேவியும் வனவாசம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்து தானும் அவர்களோடு வனவாசம் செல்ல முடிவு செய்தார். அப்போது இந்த முடிவை ஊர்மிளையிடம் தெரிவிப்பது தான் அவருக்கு பெரும் சிக்கலாக இருந்தது. இந்த முடிவை அவர் ஊர்மிளையிடம் தெரிவித்த போது, ஊர்மிளை தன் தமக்கை சீதையை போலவே தானும் இலட்சுமணருடன் காட்டிற்கு வருவதாக சொன்னார்.

அதற்கு லட்சுமணர், "நான் காட்டிற்கு செல்வதே, என் அண்ணனுக்கும், மாதா சீதா தேவிக்கு சேவையாற்ற தான். அங்கு என் மனைவி நீயும் வந்தால், நான் உன்னுடைய நல்வாழ்வினையும் சேர்த்து கவனிக்க வேண்டும். இது என் கவனத்தை திசை திருப்பக்கூடும் எனவே தயவு கூர்ந்து நாட்டில் இருந்து ஒரு இளவரசியாக நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையை நீ ஆற்று. மருமகளாக என் பெற்றோருக்கும், உன் பெற்றோருக்கும் ஆற்ற கடமைகளை ஆற்றுவாயாக" என்ற போது. கணவரின் சேவையுள்ளத்தை புரிந்து கொண்டு, தாம் அரண்மனையிலிருக்க ஒப்பு கொண்டாள் ஊர்மிளை.

அது மட்டுமின்றி, ஶ்ரீராமரையும், மாதா சீதா தேவியையும் இரவு பகல் பாராமல் காப்பதற்காக தமக்கு 14 ஆண்டுகள் உறக்கமே வரக்கூடாது என காட்டிற்கு சென்ற பின், நித்ரா தேவியை இலட்சுமணர் வணங்கிய போது, இயற்கைக்கு புறம்பான அந்த செயலை தாம் செய்ய முடியாது எனவும் அதற்கு மாற்றாக "உன் உறக்கத்தை இன்னொருவர் ஏற்றால் அது சாத்தியம்" எனவும் நித்ரா தேவி தெரிவித்தாள்.

இதனை தொடர்ந்து, "என் மனைவி இதற்கு ஒப்புக்கொள்வாள்" என நம்பிக்கையுடன் நித்ரா தேவியிடம் இலட்சுமணர் தெரிவிக்க. நித்ரா தேவி வழியே நடந்ததை அறிந்த ஊர்மிளை, தன் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய தூக்கத்தையும் தானே ஏற்று 14 ஆண்டுகள் சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து, உறக்கத்திலேயே இருந்தார். அவர் ஆற்றிய தியாகங்கள் இன்னும் ஏராளம் காப்பியத்தில் இருக்க, சீதா தேவிக்கு இணையான தியாகங்கள் புரிந்தவர் ஊர்மிளை என்பதை மறுப்பதற்கு இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News