நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்த திருத்தலம்!
பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் இருக்கும் . ஆனால் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் திருத்தலத்தை பற்றி காண்போம்.
![நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்த திருத்தலம்! நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்த திருத்தலம்!](https://kathir.news/h-upload/2023/02/21/1471475-adobeexpress2023022113155801.webp)
திருவாரூர் தியாகராஜர் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது. மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் இதுவாகும். எனவேதான் இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராக புகழ்பெற்றுள்ள ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது.தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம்பெற்றுத் தந்த ஊர் திருவாரூர். இவ்விடத்தில் சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்டதாக நம்பிக்கை. பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த ஊரிதுவாகும். எமனே சண்டிகேஸ்வரராக இருப்பதால் எமபயம் போக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது.