அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மனும் புலி உருவத்தில் வந்து காவல் காத்த ஞானி
திருவண்ணாமலையை நாடிவந்த முதல் ஞானி என்று பெருமையைப் பெற்ற ஈசான்ய தேசிகரை பற்றிய தகவலை காண்போம்.
By : Karthiga
திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்று பெருமை ஈசானிய தேசிகருக்கு உண்டு. இவர் 1750 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் பல ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கந்தப்பன். இவர் சிறு வயதிலேயே புராண இதிகாசங்களையும் சாஸ்திரங்களையும் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார். திருமண வயது வந்த போது பெற்றோர் பெண் பார்த்தனர். ஆனால் தமக்கு இல்லறத்தில் ஈடுபாடு இல்லை என்பது தெரிவித்து துறவறம் மேற்கொண்டார்.
துறவு கொண்ட தேசிகர் சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு வாழ்ந்த பிரம்மஞானி ஸ்ரீ மௌனகுரு ஸ்வாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து அவருக்கு பல ஆண்டுகள் சேவை புரிந்தார். மௌனகுரு ஜீவசமாதி அடைந்ததும் தேசிகர் சிதம்பரத்தை விட்டு புறப்பட்டார். திருவாரூர் சென்று அங்கும் சில காலம் தங்கி இருந்தார். சிறந்த தவ யோகியும் சித்த புருஷருமான தட்சிணாமூர்த்தி சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.
அண்ணாமலையாரின் திருவருளால் தேசியகருக்கு தவம் கைகூடியது. முரடர்களாலும் போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு இடையூறு வராமல் அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மனும் புலி உருவத்தில் வந்து காவல் காத்ததாக வரலாறு கூறுகிறது. தேசிகர் தம்வாழ்நாள் முழுவதும் திருவண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அந்த இடத்திலேயே தவம் செய்து வந்தார். அந்த இடம் அண்ணாமலையின் வடகிழக்கு பகுதியில் இருந்தது. அது ஈசானிய திசையை குறிக்கும் இடமாகவும் அமைந்திருந்தது. ஆகவே இந்த இடத்திற்கு ஈசானிய மடம் என்ற பெயர் அமைந்துவிட்டது. தேசிகரும் ஈசான்ய ஞான தேசிகர் என்று அழைக்கப்பட்டார்.