Kathir News
Begin typing your search above and press return to search.

நடராஜர் நடனம் உணர்த்தும் உண்மை என்ன? ஆருத்ரா விரதம் தரும் நன்மைகள்

நடராஜர் நடனம் உணர்த்தும் உண்மை என்ன? ஆருத்ரா விரதம் தரும் நன்மைகள்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  6 Jan 2023 12:15 AM GMT

சிவபெருமானின் நடராஜர் வடிவத்தை போற்றி வழிபடும் ஓர் நன்னாள். அடிப்படையில் மார்கழி பெளர்ணமியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜரின் தரிசனத்தை காண்பதை ஆருத்ரா தரிசனம் என்கிறோம். இந்த நாளில் தான் தன் தெய்வீக தாண்டவத்தை பிரபஞ்ச நடன தரிசனத்தை இந்த உலகத்திற்கு தில்லையில் நல்கினார் நடராஜ பெருமான்.

இந்த சிறப்பான நாளில் உலகெங்கும் உள்ள சிவாலயங்களிலி இருக்கும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதணைகளும் நடைபெறுவது வழக்கம். இந்த கண்கொள்ள காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பொன்னாளில் நடராஜர் ஆலயங்களில் குவிவது வழக்கம்.

இந்த நாளில் இருக்கும் திருவாதிரை விரதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. பக்தர்கள் நாள் முழுக்க விரதமிருந்து ஆருத்ரா தரிசனம் கண்டு மற்ற சிவனடியார்களுடன் தாங்கள் மேற்கொண்ட விரதத்தை முடிப்பதே இந்த விரதத்தின் சிறப்பாகும்.

ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர்களாக அறியப்படும் ஞானிகளும் ஆருத்ரா விரதம் இருந்து பெருமானின் திவ்ய நடனத்தை கண்ட புராணக்கதைகள் ஏராளம் உண்டு. முனிவர் வியாக்ரபதா, முனிசக்கர, ஆதிசேஷன் உள்ளிட்ட பலர் இந்த பாக்கியத்தை பெற்றுள்ளனர். நடராஜர் தெய்வீக தாண்டவத்தில் பஞ்ச பூதங்களும் அடக்கம், அவருடைய டமரு ஆகாயத்தின் குறியீடாகவும், பறக்கும் குழல் காற்றில் குறியீடாகவும், கையில் ஏந்தியிருக்கும் கனல் நெருப்பின் குறியீடாகவும், தலையில் சூடியிருக்கும் கங்கை நீரின் குறியீடாகவும், நிலத்தில் ஊன்றியிருக்கும் பாதம் பூமியையும் குறிக்கிறது. அசுரனை வதைக்கும் தோற்றத்தில் அவர் நடனமிருப்பது ஒருவரின் அறியாமையை, அகங்காரத்தை அழிப்பதை குறிக்கிறது.

எனவே இந்த அருப்பெரும் காட்சியை இந்த நன்னாளில் காதாலாகி, கண்ணீர் மல்க நெஞ்சுருக கண்டு தரிசிப்பது எல்லா வளங்களையும் நலன்களையும் தரும் என நம்பப்படுகிறது.

மேலும் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிற போது அவர்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கிறது என்பது நம்பிக்கை. இந்த நாளில் 18 காய்கறிகளை இட்டு நெய்வேத்யம் படைத்து, திருவாதிரை களி வைத்து இறைவனை வணங்கி அதை இல்லாத ஏழை எளியோருக்கு தானம் வழங்குவதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. அதோடு திருமாங்கல்ய கயிற்றை மாற்ற உகந்த நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News