கோ பூஜை செய்து பசுவிற்கு உணவளிப்பதால் கோடி புண்ணியம் கொட்டும்!
![கோ பூஜை செய்து பசுவிற்கு உணவளிப்பதால் கோடி புண்ணியம் கொட்டும்! கோ பூஜை செய்து பசுவிற்கு உணவளிப்பதால் கோடி புண்ணியம் கொட்டும்!](https://kathir.news/h-upload/2022/07/06/1384972-whatsapp-image-2022-07-06-at-70429-am.webp)
பசுவும் பாம்பும் இந்திய மரபில் ஆன்மீக அம்சம் பொருந்திய உயிரினங்களாக கருதப்படுகின்றன. அவை மனித இனத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான உயிரனமாக சொல்லப்படுகின்றன. மனிதர்களின் உணர்வை போலவே இவற்றிற்கும் உணர்ச்சியின் அளவு தீவிரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்து மரபில் பசுவை வழிபடுவதென்பது காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. பசுவை அன்னைக்கு நிகராக வைத்து பூஜிக்கும் பழக்கமுண்டு அதனால் பசுவை கோ மாதா என்று அழைக்கிறோம்.
அதுமட்டுமின்றி பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களான பால், வெண்ணெய், நெய், தயிர் ஆகியவற்றையே வழிபாட்டிற்கும், பூஜைக்கும் மற்றும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்துகிறோம். இறைவனுக்கு நிகராக வைத்து வழிபடப்படும் உயிரினம் என்றால் அது பசு தான். அதனால் தான் ஆலயங்களில் மற்றும் முக்கிய யாகம், ஹோமம் போன்றவை தொடங்குவதற்கு முன்பாக கோ பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. அதுமட்டுமின்றி பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அப்பேற்ப்பட்ட பசுவிற்கு உணவளிப்பதென்பது புனிதமான காரியங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
பசுவினுடைய உடலில் 330கோடி தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம், எனவே நாம் பசுவுக்கு அளிக்கும் உணவு அத்தனை தேவர்களுக்கு அளிப்பதற்கு சமமாகும். வாழ்வில் பிரச்சனையை தரக்கூடிய தோஷங்கள், கிரகநிலை போன்றவற்றை சீர் செய்ய கோவிற்கு தானமளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.
சூரிய கோளில் பிரச்சனையிருந்தால் பசுவிற்கு கோதுமையால் ஆன பொருட்களை வழங்கலாம். சந்திர கோளில் பிரச்சனை எனில் பசுவிற்கு நீர் வழங்கலாம். ராகு பிரச்சனை எனில் ஊற வைத்த கருப்பு உளுந்தை கோவிற்கு தானமளிப்பது நல்ல பலனை கொடுக்கும்.
பசுவை தேடி சென்று தானம் அளிப்பது எத்தனை நல்லதோ அதை போலவே, பசுவை நம்முடைய இல்லத்திற்கு வர செய்து தானமளிப்பதும் உகந்ததாகும். ஒரு இல்லத்தில் பசுவின் இருப்பு இருக்கிற போது அங்கே தீய சக்தியின் ஆற்றல் உடைந்து போகும். அதனால் தன வீட்டு கிரஹபிரவேசத்தின் போது பசுவை வர செய்து அதற்கு பாலும் பழமும் அர்ப்பணிக்கின்றனர். மிக முக்கியமாக யாரொருவர் பசுவிற்கு தொடர்ந்து உணவளிக்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி சகல வளங்களையும் அருளுவாள் என்பது ஐதீகம்