Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் சபரிமலையாகத் திகழும் கோவில் எது தெரியுமா?

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தேவிபட்டினம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராமநாதபுரம் ஐயப்பன் கோயில்.

தமிழகத்தின் சபரிமலையாகத் திகழும் கோவில் எது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  18 July 2023 8:45 AM GMT

ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தமிழகத்தின் சபரிமலையாக திகழ்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைப்பில் கட்டப்பட்ட இந்த கோவில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கிறது. மேல் பகுதியில் ஐயப்பன் பாலகனாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் . பஞ்சலோகத்தால் ஆன அவரது சிலை கேரளத்தில் செய்யப்பட்டது என்கிறார்கள். இவரது சந்நிதி முன்பாக 18 படிகள், அருகில் புலி வாகனமும் உள்ளது. படியின் அருகில் கடுத்த சாமி, கருப்பண்ணசாமி கருப்பாயி ஆகியோர் காவல் தெய்வங்களாக வீற்று இருக்கின்றனர்.


வலதுபுறம் கன்னிமூல கணபதியும் இடதுபுறம் மாளிகைப்புற அம்மன் சன்னிதிகளும் இடம் பெற்று இருக்கின்றன. சபரிமலை நடை திறக்கும் நாட்களிலேயே இங்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. கேரளாவில் ஆறாட்டு உற்சவத்திற்கு செல்வது போலவே இங்குள்ள சுவாமி கையில் வில் அம்புடன் இருக்கிறார். கோவில் திறப்பின்போது 18 படிகள் மீதும் கவசம் வைத்து பட்டுணி போர்த்துவார்கள். பின்னர் உண்ணியப்பம், அரவனை பாயாசம் படைத்து மலர் அலங்காரத்துடன் படி பூஜை செய்வார்கள்.


மகரஜோதி அன்று திருவாபரண பெட்டி ஊர்வலம், ஜோதி தரிசனம் நடைபெறும். சித்திரை பிறப்பன்று விஷு கனி காணும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் பாலகன், பூரணையுடன் குடும்பஸ்தன், பிரம்மச்சாரியாக இருக்கால்களையும் மடக்கி ஆசனத்தில் உள்ள யோக நிலை என்று மூன்று கோலத்தில் ஐயப்பனை நாம் தரிசிக்கலாம். பத்து கைகளுடன் உள்ள தசபுஜ ஐயப்பன் சிலையும் இங்கு உள்ளது.


இவர் கைகளில் சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, திரிசூலம், சுத்தி ஏந்தி இருக்கிறார். ஐயப்பனை மனம் புரிய விரும்பிய மஞ்சள் மாதாவுக்கும் சன்னிதி உள்ளது. திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து மஞ்சள் பொடி தூவி வழிபடுகின்றனர். இங்கு உள்ள ஐயப்பனின் கழுத்தில் மணி கட்டுவதாக வேண்டிக் கொண்டால் அவர்களின் வீட்டில் மழலை குரல் விரைவில் கேட்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News