Kathir News
Begin typing your search above and press return to search.

பக்தரை காக்க சடாமுடியுடன் காட்சி தந்த சடையப்பர் ஆலயம். புராண அதிசயங்கள்!

பக்தரை காக்க சடாமுடியுடன் காட்சி தந்த சடையப்பர் ஆலயம். புராண அதிசயங்கள்!

G PradeepBy : G Pradeep

  |  27 March 2021 12:15 AM GMT

சிவசைலம் என அழைக்கப்படும் புகழ்மிக்க இந்த கோவிலை சிவசைலநாதர் பரமகல்யாணி அம்மன் கோவில் எனவும் அழைப்பார்கள். இங்குள்ள சிவசைல நாதர் சுயம்புவாக தோன்றியவர். ஆனால் இங்குள்ள பரம கல்யாணி அம்மன் அருகிலுள்ள கீழ அம்பூரி சேர்ந்தவர். இவருடைய திருவுருவம், ஆம்பூரிலிருந்த கிணற்றிலிருந்து கிடைக்கப்பெற்றது என்பது நம்பிக்கை.


மற்ற கோவில்களில் எல்லாம் அய்யனுக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் மட்டுமே திருக்கல்யாணம் முடிந்த பின்பாக, பெண்ணும் மாப்பிளையும் மறுவீடு செல்லும் வைபவமும் நடக்கிறது. சிவசைலத்தில் திருமணமும், ஆம்பூரில் மறுவீட்டு சடங்கும் நிகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

இந்த கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 3 கி.மீ தள்ளி இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி வெள்ளி மலை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் முல்லை மலை ஆகியவை சூழ அமைந்துள்ளது. மேலும் இந்த கோவில் தேவாரம் வைப்புத்தலமாகவும் திகழ்கிறது.


இந்த கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், இங்குள்ள ஜமீன் தாரிடம் பல பசு மேய்பர்கள் இருந்தனர். வழக்கமாக அந்த பசு மேய்பாளர்கள் பால் கறப்பது வழக்கம். ஒருநாள் அனைத்து பசுக்களும் பால் கறக்க மறுத்துவிட்டன. இது குறித்து தங்கள் முதலாளியிடம் புகார் தெரிவித்தனர்.

கோபமடைந்த முதலாளி பால் கறக்காத பசுக்களை துரத்தி கொண்டு சென்றார். அனைத்து பசுக்களும் மலையின் உச்சியில் கூடி பால் கறந்தன. அவை பால் கறந்த இடத்தில் சுயம்புவாக லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தில் மட்டுமே உளியின் அடையாளம் இல்லை எனவும் சொல்லப்ப்படுகிறது. இவரே சிவசைலநாதர் என அழைக்கப்படுகிறார்.

சிவசைலத்தில் இருக்கும் மற்றொரு ஆச்சர்யம் சிவசைல நாதரின் சடாமுடி. ஒருமுறை பாண்டிய மன்னர் தன்னுடைய பிரசாதத்தை பெற்றுகொள்ள கோவில் வந்ததார். அர்ச்சகர் மன்னருக்கு மாலையை மரியாதை நிமித்தமாக அளித்த போது அதில் ஒரு தலைமுடி இருந்ததை கண்டு சினமுற்றார்.

சிவபெருமானின் சடாமுடியாக இருக்ககூடும் என யதார்த்தமாக பதிலளித்த அர்ச்சகரின் வார்த்தையை மெய்ப்பிக்க முனைந்தார் சிவபெருமான். தன்னுடைய தீவிர பக்தரான அர்ச்சகரை காத்தருள எண்ணிய சிவபெருமான் சடாமுடியுடன் காட்சி அளித்துள்ளார். இன்றும் இங்கிருக்கும் சிவலிங்கத்தின் பின் மூன்று கோடுகள் போன்ற அமைப்புள்ளது. இதனாலேயே இங்கிருக்கும் இறைவனை சடையப்பர் எனவும் அழைக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News