உலகின் பெரிய நந்திகளுள் ஒன்று! ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெங்களூரு பசவண்ண கோவில் !
![உலகின் பெரிய நந்திகளுள் ஒன்று! ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெங்களூரு பசவண்ண கோவில் ! உலகின் பெரிய நந்திகளுள் ஒன்று! ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெங்களூரு பசவண்ண கோவில் !](https://kathir.news/h-upload/2021/11/18/1272243-dodda-basavana-gudi.webp)
தொட்ட பசவண்ண குடி தெற்கு பெங்களூருவில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். தொட்ட என்பதற்கு பெரிய என்று பொருள், பசவண்ண என்பது நந்தியை குறிக்கிறது. இங்கே பெரிய அளவிலான நந்தியின் திருவுருவம் வழிபடப்படுகிறது. அதனாலேயே இக்கோவிலுக்கும் இக்கோவில் அமைந்துள்ள பகுதிக்கும் பசவண்ணகுடி என்று பெயர்.
பகல் பாறையில் அமைந்துள்ளது இந்த திருவுருவம். நம் மரபில் சொல்லப்பட்ட எதுவும் வெறுமனே மேலோட்டமானது அல்ல. மிகவும் ஆழமான, அர்த்தங்களை கொண்டதாகும். சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தின் தலையாயவர் ஆவார். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரை நாம் மகா தேவர் என அழைக்கிறோம் காரணம், கடவுளர்கெல்லாம் கடவுள், தேவர்கெல்லாம் தேவர் அவர் என்பதால்.
ஆதியோகியான அவர் பிரபஞ்ச இயக்கத்திற்காக தன்னையே மூன்று மூர்த்திகளாக வெளிப்படுத்தி கொண்டார். இதில் உண்மை என்பது லிங்கமாகவும், ஆன்மா என்பது நந்தியின் வடிவில் இருப்பதாகவும் சொல்வர். உண்மையில் நந்தி என்பது முழுமையான கவனத்துடன் இருக்க கூடிய ஜீவன். ஒருவரின் உள்வாங்கும் தன்மையை இது குறிக்கிறது.
முழுமையான கவனத்துடன் உள்வாங்கும் தன்மையே சிவனின் வாகனமான நந்தியாக இருக்கிறது. இந்த நந்தி தேவருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடம் தான் இக்கோவில். இக்கோவில் 1537 ஆம் ஆண்டு கெம்பே கவுடா என்பவரால் விஜயநகர பேரரசின் கீழ் கட்டப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய நந்திகளுள் ஒன்று என்கிற பெயரும் இக்கோவிலுக்கு உண்டு.
இந்த கோவிலில் விஷேசமாக, ஒவ்வொரு கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நிலக்கடலை உற்சவம் நடைபெறும். அந்நாளில் கடலைகளை நந்தி பெருமானுக்கு சாற்றுவார்கள். இதனை கன்னடத்தில் கடலேக்காய் பரிக்ஷே என்று அழைப்பார்கள். இந்த நாளில் உள்ளூர் கடலை வியாபாரிகளின் கூட்டம் இக்கோவிலில் அலைமோதுவது வழக்கம்.
கர்நாடகா சுற்றுலா தலங்களுள் பெங்களூருவில் இருக்கும் இந்த பசவண்ண கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த நந்தி கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள பகல் பாறையில் இந்த நந்தியின் திருவுருவம் அமைந்துள்ளது. நந்தி தேவருக்கென இருக்கும் இக்கோவிலின் கீழே, விநாயகர் கோவில் இருப்பது இதன் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். அதுவும் இவர் சாதாரண வடிவில் இல்லாமல், நந்தியை போலவே பெரிய திருவுருவமாக காட்சி தருகிறார். அதனாலேயே இந்த விநாயகருக்கு தொட்ட கணேச கோவில் என்று பெயர்.
Image : ExploreBiss