Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதராக பிறக்கும் முன் 84000 முறை வெவ்வேறு உயிரனமாக பிறக்கிறோம்!

மனிதராக பிறக்கும் முன் 84000 முறை வெவ்வேறு உயிரனமாக பிறக்கிறோம்!

G PradeepBy : G Pradeep

  |  26 April 2021 12:16 AM GMT

மர்மங்களில் மிக சுவாரஸ்யமான மர்மம் என்பது பிறப்பும் இறப்பும் தான். பலருக்கு மறுபிறப்பில் நம்பிக்கை என்ற போதும், மறுபிறப்பு என்கிற ஆழமான நம்பிக்கையை இங்கு மறுப்பதற்கில்லை. இந்த மறு பிறப்பு என்பது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது என்பதை பல குருமார்கள் தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

அதே வேளையில் மறுபிறப்புக்கான காரணமாக சொல்லப்படும் சில பொதுவான காரணங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அதில் மறுபிறப்புக்கான முக்கிய காரணம் நம்முடைய கர்ம வினைகள். கர்ம வினைகளின் கணிதத்தின் படியே மறுபிறப்பு என்பது அமைகிறது. இந்து மரபில், கர்மா எப்படி செயல்புரிகிறது என்பது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.



நாம் நினைத்திருக்கலாம், இந்த பிறவியில் நாம் எந்த தவறும் இழைக்கவில்லையே பின்பு ஏன் நமக்கு சோதனை என்று நாம் நினைக்கலாம். அதற்கான காரணம், சென்ற பிறவியில் நாம் இழைத்த பாவமாக இருக்கலாம் அல்லது நம் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்த பாவத்தின் வெளிப்பாடகவும் இருக்கலாம்.

இதற்கிடையே நாம் பல பிறவிகள் எடுக்கிறோம் என யோசித்தால், ஒருவர் மனித பிறவியை எடுக்கும் முன்பாக 84000 முறை வெவ்வேறு உயிரனமாக மண்ணில் பிறப்பெடுக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. சிறு புல்லாகி, புழுவாகி மனிதராக மாறும் வரை ஒருவர் 84000 பிறப்பினை கடந்து வருகிறார்கள் .

இதற்கிடையில் ஒருவர் மனிதனாக பிறந்த பின்பும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள் காரணம், நமக்கு நிகழ்ந்ததன் எதிர்வினையை நாம் ஆற்ற நினைப்பதால். உதாரணமாக, ஒருவர் நம்மை திட்டிவிட்டால் நாமும் அவரை திட்ட வேண்டும். ஒருவர் நம்மை ஏமாற்றினால், நாமும் அவரை பழி வாங்க வேண்டும். இது போல நமக்கு நிகழும் நிகழ்வுகளுக்கான எதிர்வினையே நமக்கு கர்ம வினைகளாக மாறுகின்றன. அதில் நல்ல எதிர்வினைகளும் இருக்கும் சில தீய எதிர்வினைகளும் இருக்கும்.

நமக்கு ஒருவர் நல்லது செய்தால்,நாமும் நல்லது செய்தால் அது நல்ல கர்மாவை நமக்கு சேர்க்கும். இதில் நாம் பல பிறவிகள் எடுக்க முக்கிய காரணம், நிறைவேறாத ஆசைகள். நீங்கள் ஒன்றை விரும்பினீர்கள், அல்லது சங்கல்பம் மேற்கொண்டீர்கள் அதை இந்த பிறவியில் முடிக்கவில்லையெனில் அந்த ஏகத்தினாலே உயிர் பிரிந்தால், அது அடுத்த பிறவிக்கு காரணமாக அமையக்கூடும்.

ஆசைகள் நிறைவேறாமல் உயிர் துறக்கிற போது, அங்கே உடல் மட்டுமே இறக்கிறது. ஆசை நிறைந்த ஆன்மா இறப்பதில்லை. அதனால் தான் எல்லா ஆசாபாசங்களையும் இருக்கும் ஒரு பிறவியிலேயே கடக்க வேண்டும், துறக்க வேண்டும் என நமக்கு உணர்த்தப்பட்டது. இந்த ஆசையெனும் பற்றை அறுப்பதற்கு தான் நமக்கு ஆன்மீக குருமார்களின் வழிகாட்டுதல் தேவை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News