Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரியின் 'பெரிய கோவில்'!

பல்வேறு அற்புதங்கள் நிறைந்த கோலவார்குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரியின் பெரிய கோவில்!

KarthigaBy : Karthiga

  |  26 March 2024 7:07 AM GMT

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் 'ஒழுகினசேரி' பகுதியில் உள்ள பழைய ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பெரிய கோவில். இது சோழ மன்னனர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும். தற்போதுள்ள நாகர்கோவில் முன்பு 'கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது .பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப் பகுதிகள் மாறிவிட்டன .ஆகவே நாகர்கோவிலில் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி' என்ற பெயரே காலப்போக்கில் மருவி ஒழுகின சரி என்று மாறியதாக கூறப்படுகிறது.

இங்கு 'அரவநீள்சடையான்' என்ற பெயரில் மகாதேவர் ஆன சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூம் குரலில் என்ற பெயரில் கோலவார் குழலி என்ற பெயரில் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள் புரிகிறார். கிபி பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது இந்த சோழராஜா கோவில். இந்த சோழராஜா கோவில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள்.

இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். ராஜேந்திர சோழீஸ்வரன் சேரநாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்து விட்டார். அதைத் தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு மூலவரான 'அரவநீள் சடையான்' சன்னிதி உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழராஜா கோவில் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சோழராஜா கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி உரிய காலத்தில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம்வேண்டுபவர் இந்த கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டால் குழந்தை தோஷங்கள் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள் .ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் சோதனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து விடுபட்டு செல்கின்றனர். கல்வெட்டுகளில் 'அரவநீள் சடையான்' என்று உள்ளதாகவும் மேலும் சோழீஸ்வரன் உடைய ராஜேந்திர சோழீஸ்வரமுடைய நயினார் பெரிய நயினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற தெருக்களும் சோழராஜா கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன. தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவில் விமானமும் நான்கு பக்க கற்சுவர்களின் மேற்கூறையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன .சோழர்கள் காலத்திற்குப் பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கோவில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவான சிவபெருமானின் மொத்த உயரம் 18 அடி ஆகும். விட்டம் 16 அடி. இதில் மூன்று அரை அடி உயரம் நிலத்தின் அடியில் மீதி உள்ள 14 அரை அடி மண்ணில் புதைந்த நிலையிலும் லிங்க வடிவில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகிறார் .தூய மனதுடன் பக்தி பரவசத்துடன் கருவறையில் இருக்கும் இறைவனை ஓம் நமசிவாய என்று இரு கரம் கூப்பி வணங்குபவர்கள் சிவபெருமானையே நேரில் பார்ப்பது போல் உணர்வதாக கூறுகின்றனர்.

பூமிக்கு அடியில் இருந்து இறைவன் அருள் செய்வதால் நில சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இங்கு வந்து முறையிட்டால் உடனே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்திருத்தலத்தில் அம்பாள் கோலவார்குழலாள் ஈஸ்வரி என்ற பெயரில் நின்றகோலத்தில் காட்சி தருகிறார் மற்றும் கோவில்களில் அம்பாள் எப்போதும் பக்தர்களை நேரில் பார்த்தபடி அருள் பாலிப்பார். ஆனால் இங்கு அம்மன் தனது முகத்தை சற்று இடது புறமாக சாய்த்து சிவனை ஓர கண்ணால் பார்ப்பது போல் அமைக்கப்பட்டிருப்பது ஆலயத்தின் தனிச்சிறப்பாகும் .

கோவிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும் .இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்பு கொண்டது. ஆனால் இங்குள்ள கொன்றை மரம் வருடத்தின் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. குமரி மாவட்டம் வரும் ஆன்மீக பக்தர்கள் நிச்சயம் சோழராஜா கோவிலுக்கு வந்து வணங்கினால் ஈசன் அம்பாளின் முழு அருளை பெற முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

கோவில் நடை காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு 10.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7:30 மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு மொத்தம் ஏழு பிரகாரங்கள் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகை உள்ளிட்ட பல்வேறு படையெடுப்பு காரணமாக இரண்டு பிரகாரங்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News