Kathir News
Begin typing your search above and press return to search.

காதலர்களை காப்பாற்றிய கரிக்ககம் சாமுண்டி தேவி!

கரிக்ககம் என்ற இடத்தில் மூன்று ரூபங்களில் காட்சி தரும் சாமுண்டி தேவியின் ஆலயம் பற்றி காண்போம்.

காதலர்களை காப்பாற்றிய கரிக்ககம் சாமுண்டி தேவி!

KarthigaBy : Karthiga

  |  15 March 2024 1:40 PM GMT

கரிக்ககம் என்ற இடத்தில் சாமுண்டி தேவி மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறாள். சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என்ற மூன்று விதமாக இத்தல அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். வேதங்களை கற்றறிந்த ஞானி ஒருவர் யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று அவருக்கு பல போதனைகளையும் அருள்வாக்கையும் அருளினார். தன் குருவை போலவே யோகீஸ்வரனும் பராசக்தியை வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை குருவாகவும் சீடனும்க சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து பச்சை பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.


அப்போது அந்த சிறுமி அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து 'நான் இங்கேயே குடி கொள்வேன் என்று கூறி' மறைந்தாள். இதை அடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது கரிக்ககம் சாமுண்டியாக அருள் பாலிக்கிறார். இந்த அம்மனை பராசக்தி என்றும் பகவதி என்றும் பரமேஸ்வரி என்றும் அழைத்து மக்கள் வழிபடுகின்றனர். சேர மன்னர் ஒருவரின் ஆட்சி காலத்தில் அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை சிறையில் அடைத்து விட்டனர் .


சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தி ஆவாள். அவள் அரசியிடம் ஓடிச் சென்று 'நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு அவரை விடுதலை செய்யுங்கள்' என்றாள். விசாரணை மன்னன் முன்பாக வந்தது .அப்போது காதலனோ 'அவள் மீது எந்த தவறும் இல்லை .நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள் .அவளை விட்டு விடுங்கள்' என்றான். காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி சொன்னதால் யார் குற்றவாளி என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான். பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான் .


அதன்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினார். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவாள் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவெடுக்கப்பட்டது .அரண்மனை காவலனும் அவனது காதலியும் ஆலய குளத்தில் நீராடி ஈரஆடையுடன் ரத்த சாமுண்டி சந்நிதி முன்பாக வந்து நின்றனர். அப்போது அரசின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடி வந்தாள். அவள் அங்கிருந்த அரசன் மற்றும் அரசியின் முன்பாக 'இன்று சலவைக்கு போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் இருந்து இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு என்று கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடோடி வந்தேன்' என்று கூறி அந்த காதணியை மன்னனிடம் கொடுத்தாள். தன் தவறுக்கு வருந்திய மன்னன் அரண்மனை காவலனையும் அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டான்.


அரசியோ தன்னுடைய இரண்டு காதணிகளையும் கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரி சண்டை பயின்ற நிபுணர்களின் களரிக்களமாக இந்த இடம் விளங்கியிருக்கிறது. களரிக்களம் என்பதே மருவி கரிக்ககம் என்றானதாகவும் சொல்கிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில். திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது கோவில்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News