Kathir News
Begin typing your search above and press return to search.

புதியன புலரும் வேளை! நலன்களை அருளும் தை மகளை போகியோடு வரவேற்போம்

புதியன புலரும் வேளை! நலன்களை அருளும் தை மகளை போகியோடு வரவேற்போம்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  14 Jan 2023 12:45 AM GMT

மார்கழி முடிந்து தை மகள் பிறக்கும் வேளையிது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் வாக்கிற்கு ஏற்ப இந்த ஆண்டு தை மிகவும் சிறப்பானது. பெரும் பேரிடர் காலத்தை கடந்து, உலகம் ஒரு புது வெளிச்சத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் வேளையில். இன்று உதிக்கின்ற கதிர் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை பரப்ப வேண்டும். இன்று பொங்கி வழியும் இன்பம் மென்மேலும் பொங்க வேண்டும். இந்த புத்துணர்வு மிகுந்த உணர்வு தான் பொங்கல் திருநாளின் சிறப்பு.

மற்ற பண்டிகைகளை போல அல்லாமல் பொங்கல் தனித்துவமான பண்டிகையாக மிளிர்வதன் காரணம், இவை கொண்டாடம் என்கிற அளவோடு நின்றுவிடாமல் ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு பண்டிகையை மொத்த நாடும் வெவ்வேறு பெயர்களில், அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில், அவர்களின் வாழ்கை முறையுடன் தொடர்புட படுத்தி இந்த் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இதன் பொருட்டே பொங்கலை தமிழர் திருநாள் என்று அழைக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. இது ஒரு மொழியின் திருவிழா. மற்றும் நம் வாழ்வதாரமான விவசாயத்தை போற்றும் திருவிழா. மத இன வேறுபாடுகளை தாண்டி நாடெங்கும் இருக்கும் தமிழர்களால், உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்படும் விழா.

தைத் திங்கள் தண்ணிய தரினும் என குறுந்தொகையும்..

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என கலித்தொகையும் என இலக்கியங்களில் தைத் திங்களை போற்றி பாடியுள்ளனர்.

இந்த நாளில் அதிகாலை எழுந்து நீராடி, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வீட்டின் வாயிலில் கோலமிட்டு பொங்கல் வைத்து “பொங்கலோ பொங்கல் “ என குலவையிட்டு இயற்கையை வணங்குவது வழக்கம். இதன் தார்பரியம் யாதெனில், உழைக்கின்ற உழவருக்கு, நமக்கு உணவளிக்கும் பூமிக்கு இயற்கைக்கு, நம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சூரியனுக்கு, நம் வாழ்விற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிற நன்நாள் இது.

வட இந்தியாவில் இந்த பண்டிகையை மகர சங்கராந்தி என்று கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகை என்பது நான்கு நாள் திருவிழா பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற தத்துவத்துடன் பொங்கலின் முகப்பில், மார்கழியின் இறுதியில் போகி பண்டிகை என கொண்டாடப்படுகிறது. பொங்கல் பின், கால்நடைக்கு நன்றி செலுத்தும் மாட்டு பொங்கல், அதன் பின் உறவினர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறி மகிழ காணும் பொங்கல்.

இன்று பொங்கவிருக்கும் பொங்கலை போலே அனைவரின் வீட்டிலும் இன்பமும், வளமும் பெருக வேண்டும். கதிர் நியூஸ் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News