Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பான் நாட்டிலும் வழிபடப்படும் சரஸ்வதி தேவி!

இந்தியாவின் ஆன்மீக கருத்துகள் மற்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. அப்படி ஒரு வழிபாடாக ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.

ஜப்பான் நாட்டிலும் வழிபடப்படும் சரஸ்வதி தேவி!
X

KarthigaBy : Karthiga

  |  9 Oct 2024 9:15 AM GMT

சரஸ்வதியை ஜப்பானில் பென்சைட்டென் என்று குறிப்பிடுவார்கள். ஜப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் இவரும் ஒருவர். இந்தியாவில் எழுதப்பட்ட பௌத்த நூலான 'சுவர்ண பிரபாஸ சூத்திரம்' மூலம் ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த பௌத்த நூலில் சரஸ்வதி பற்றி விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது .

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய 'யமாடோ' வம்ச சக்கரவர்த்திகள், ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்து இருக்கின்றனர் . அவர்கள் காலத்தில் தான் முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள் சடங்குகள் அதிகம் இருக்கும். இந்து மதமும் புத்த மதமும் பரவின .இந்த இரண்டு மதங்களும் இந்தியாவில் இருந்து சென்ற துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜப்பானிய ஆன்மீக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன .ரிக் வேதத்தில் விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை சரஸ்வதி அழித்த தகவல் உள்ளது. மேலும் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார்.

டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. டோக்கியோ நகர் கோவிலில் உள்ள சரஸ்வதி ஜப்பானிய உடை அணிந்து தாமரை பூவின் மீது அமர்ந்திருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி தன் கைகளில் ஒரு இசைக் கருவியை தாங்கி இருக்கிறார். எனோஷிவா தீவில் உள்ள கோவில்களைப் பற்றிய நூலில் 'அநவப்தம்' என்ற ஏரியில் உள்ள டிராகன் அரசனின் மூன்றாவது மகள் சரஸ்வதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. பென்சைட்டென் என்ற சரஸ்வதி சக்தி பெற்ற தெய்வமாகவும் ஜப்பானைக் காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

அதற்கு காரணம் ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதை காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்கள் நம்புகின்றனர். மேலும் இனிமையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தி ஆகியவற்றை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள் .கங்கை, யமுனை சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவது போல ஜப்பானிலும் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள் .கல்வி கடவுள் என சரஸ்வதி தேவி புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறாள் .

இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்கு உள்ள மக்கள் கடைபிடித்து வருகின்றனர் .நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதைப் போலவே ஜப்பானிய பென்சைட்டெனும் தந்திகள் கொண்ட இசைக் கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள் தங்களின் பிள்ளைகள் கல்வி கலைகளில் சிறக்கவும் முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் 'பென்சைட்டென்' என்று அழைக்கப்படும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News