பங்குனி உத்திரம் -அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு?
மீன ராசியில் சூரியன் இருக்கும் பொழுது உத்திர நட்சத்திரம் வரும் வேலையில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இதனை 'பங்குனி உத்திர விரதம்' என்றும் சொல்வார்கள்.
![பங்குனி உத்திரம் -அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு? பங்குனி உத்திரம் -அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு?](https://kathir.news/h-upload/2024/03/22/1602227-adobeexpress2024032216072401.webp)
அன்னை பார்வதி தேவி பரமசிவனை மணந்து கொண்ட அருமையான நாள்தான் இந்தப் பங்குனி உத்திரம். ராமபிரான் சீதாதேவியை மணந்த தினம், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது என்று பலவகையான சிறப்புகள் இந்த நாளுக்கு உண்டு. அன்றைய தினம் தெய்வீக திருமணங்களை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை மிக மிக விசேஷமானதாகும். அயோத்தி வந்த விஸ்வாமித்திரர் தசரத மகாராஜவிடம் வனத்தில் முனிவர்களை யாகம் செய்யவிடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிக்க ராம லட்சுமணரை தனுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கிறார்.
தசரதனின் ஒப்புதலின் பேரில் ராமனும் லட்சுமணனும் விசுவாமித்திரர் உடன் கானகம் சென்றனர். அங்கு யாகத்திற்கு இடையூறாக இருந்த தாடகை எனும் அரக்கிய அழித்தனர் .பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் அகலிகையின் சாபம் ராமனால் நீங்கியது. பின்னர் அவர்கள் ஜனகர் ஆட்சி செய்து வந்த மிதிலாபுரி நோக்கி சென்றனர் .நிலத்தை உழுதபோது பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்து ஜனகருக்கு கிடைத்த குழந்தைதான் சீதாதேவி. வளர்ந்து நின்ற சீதா தேவியை தன்னிடம் இருக்கும் சிவதனுசை வளைத்து நாண் ஏற்றும் ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று ஜனகர் அறிவித்திருந்தார்.
அதன்படி மிதிலாபுரி வந்த ராமரும் சிவதனுசை தன் புஜபலத்தால் வளைத்தது மட்டுமல்ல அந்த வில்லை உடைக்கவும் செய்தார் .அப்போது ஜனகர் அங்கிருந்த தன்னுடைய புரோகிதான சதாநந்தரை நோக்கி இவர்களுக்கு விவாகம் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். மேலும் என் மற்றொரு மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கும் என் சகோதரர் குசத்வஜருடைய குமாரிகளாகிய இருவரில் சுருதா கீர்த்தியை சத்ருகனுக்கும் மாண்டவியை பரதனுக்கும் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று மகம் நட்சத்திரம் அடுத்த மூன்றாவது நாள் உத்திர நட்சத்திரம் .
அன்றைய தினம் இந்த நான்கு திருமணங்களும் நடைபெற வேண்டும் என்று கூறினார். அப்படி அந்த நால்வரின் திருமணம் நடைபெற்ற தினமே பங்குனி உத்திரம் ஆகும். இந்த நாளில் புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராடி ஆலயங்களில் நடைபெறும் தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மிக மிக விசேஷம். பலர் விரதம் இருந்து பழனி, சுவாமிமலை போன்ற தளங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள் . இந்திராணி இந்த விரதத்தை கடைபிடித்து இந்திரனை திருமணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம்.
சரஸ்வதியும் இந்த விரதத்தை கடைபிடித்துதான் பிரம்மாவை மனம் புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது இந்தப் பங்குனி உத்திரம் விரதம் இருந்து தெய்வீக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் அனைவருக்கும் இதுநாள் வரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மேலும் இந்த நாளில் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை காண்பவர்கள் திருமணம் ஆகி பிரிந்து இருந்தால் அவர்களும் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.