வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும் ஆச்சர்ய பத்ரிநாதர் ஆலயம்
வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும் ஆச்சர்ய பத்ரிநாதர் ஆலயம்

விஷ்ணு பரமாத்மா பூஜிக்கப்பட்ட முக்கியமான 108 திவ்ய தேசங்களில் ஒன்று பத்ரிநாத் கோவில். இது திருமாலை வணங்குபவர்களுக்கு மிகவும் புனிதமாகப் போற்றப்படும் இடமாகும். பத்ரிநாத் அல்லது பத்ரி நாராயணர் கோவில் என அழைக்கப்படும் இந்த திருத்தலம் விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.
இந்த கோவில் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். ஏப்ரல் இறுதியில் இருந்து நவம்பர் மாதத்தின் துவக்கம் வரை மட்டுமே இங்குள்ள பெருமாளை நாம் தரிசிக்க முடியும். இதற்கு இமாலயப் பகுதியில் நிலவும் அதிகமான குளிர் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் அதிகமான பக்தர்களின் வருகையை பதிவு செய்த கோவில்களில் இந்த கோவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.
புராணங்களின்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பத்ரிநாத் கோவில். விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றில் ஆழ்வார்கள் இந்த கோவில் குறித்து பல பாடல்களை இயற்றி உள்ளனர். இந்த கோவில் மூன்று முக்கிய வடிவங்களாக பிரிந்துள்ளது. கர்ப்பகிரகம், தரிசன மண்டபம் மற்றும் சபா மண்டபம். இந்தக் கோவிலின் கட்டிடக்கலை பார்ப்பதற்கு பௌத்த மதத்தின் கட்டிடக்கலையை ஒத்ததாக அமைந்திருக்கிறது.
ஒரு சிலர் இந்த கோவில் எட்டாம் நூற்றாண்டு வரை பெளத்த தலமாக இருந்ததாகவும், ஆதிசங்கரர் இந்த கோவிலை இந்து கோவிலாக மாற்றி அமைத்தார் எனவும் சொல்கின்றனர். ஆதிசங்கரர் இந்த கோவிலில் 6 வருடங்கள் தங்கியிருந்தார் எனவும் குறிப்புகள் உண்டு. ஆதிசங்கரர் அலக்நந்தா நதிக் கரையில் பத்ரி நாதரின் திருவுருவச் சிலையை கண்டெடுத்தார் எனவும் சொல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு பத்ரிநாத் என பெயர் வருவதற்கான காரணத்தை யாதெனில், ஒருமுறை விஷ்ணு பெருமான் இந்த இடத்தில் தியானத்தில் அமர்ந்து இருந்தார். அவர் தீவிரமான தவம் இயற்றிய பொழுது அங்கு நிலவும் கடும் குளிர் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. அவருடைய துணைவியான லட்சுமிதேவி தன்னுடைய கணவர் குளிரில் தவம் இயற்றுவதை கண்டார். அவரை அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக பத்ரி மரமாக அங்கே தோன்றியுள்ளார். அவருடைய இந்த செய்கையினால் மனம் குளிர்ந்த விஷ்ணு பரமாத்மா இந்த இடத்திற்கு பத்ரி ஆசிரமம் எனப் பெயர் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இங்கு விஷ்ணு பெருமான் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு இருக்கிறார்.
இந்த கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு ஆச்சரியமான குறிப்பு யாதெனில். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய அவதாரம் முடித்து திரும்ப எத்தனிக்கையில் அவருடைய தீவிர பக்தரான உத்தவர். அர்ஜுனனுக்கு செய்ததைப் போல் தனக்கும் கீதா உபதேசம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு உத்தவ கீதை உபதேசத்தை செய்தார் கிருஷ்ணர். பின்னர் “உன்னுடைய வாழ்நாள் முடிந்த பின்னே வைகுண்டம் வரலாம் அதுவரை பத்ரிகாஸ்ரமம் சென்று பகவானைத் தியானித்து இருப்பாயாக” என்று கூறினாராம் கிருஷ்ணர். அதன்படி அவர் அருகில் உள்ள இந்த பத்ரு ஆசிரமத்தில் தங்கி பகவானை தியானித்து வைகுண்டம் சென்றார் என்பது வரலாறு