Kathir News
Begin typing your search above and press return to search.

சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்

குடும்பம் வளமுடன் நலமுடனும் செல்வ செழிப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ ரிஷிகளும் மகான்களும் சில வேதங்களை ஏற்படுத்தி கடைபிடிக்க செய்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் வரலட்சுமி நோன்பு.

சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2023 8:38 AM GMT

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிகிழமையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. நாம் விரும்பும் மரங்களை லட்சுமி தேவி தருவாள் என்பதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது . தமிழகத்து பெண்கள் விரும்பி கடைபிடிக்கும் விரதம் ஆகவும் மாங்கல்ய பலம் மற்றும் சகல சௌபாக்கியங்களுக்காக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் முக்கியமான விரதமாகவும் இது இருக்கிறது.


மகத தேசத்தில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள் பதிவிரதையான அவள் அவளது கணவன் உஞ்சவிருத்தி மூலம் கொண்டுவரும் அரிசியை சமைத்து குடும்பம் நடத்தி வந்தாள். தன் கணவரையும் அவரின் பெற்றோரையும் பணிவுடன் போற்றினாள். அதிகாலையில் எழுந்து அனைத்து பணிகளையும் முடித்து குடும்பத்தை அமைதியாக நடத்தி வந்தாள்.சாருமதியிடம் கருணை கொண்ட வரலட்சுமி தேவி அவளுக்கு அனுகிரகம் செய்ய நினைத்து அவளது கனவில் தோன்றினாள்.


சாருமதி உன் பக்தியால் மகிழ்ந்து உனக்காக நான் வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னை பூஜித்தால் உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறினாள். உடனே சாருமதி கனவிலேயே வரலட்சுமி தேவியை வலம் வந்து தனக்குத் தெரிந்த மந்திரங்களை சொல்லி வழிபட்டாள். பின்னர் வரலட்சுமி தேவியை வழிபடும் முறைகளைப் பற்றியும், தாயாரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் சாருமதி. அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு வரலட்சுமி தேவி மறைய கண்விழ்த்து பார்த்த சாருமதி அனைத்தும் கனவு என்பதை உணர்ந்தாள்.பின்னர் தன் கனவில் கண்ட விரதத்தை பற்றி கணவன், மாமனார், மாமியார் ஆகியோரிடம் கூறினாள்.அவர்கள் மகிழ்ந்து நீ கனவில் கண்ட அந்த மிக உன்னதமான விரதத்தை அவசியம் வீட்டில் நடத்த வேண்டும் என்று கூறினார்.


இதற்கிடையில் வரலட்சுமி தேவியால் சொல்லப்பட்ட குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. இதை அடுத்து சாருமதியும் அவள் வீட்டில் உள்ளவர்களும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி புதிய வஸ்திரங்களை அணிந்து கொண்டு பூஜை செய்ய தேவையான பொருட்களை சேகரித்தனர். சாருமதி வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு மெழுகி கோலமிட்டாள். வரலட்சுமி தேவி அமர ஒரு மண்டபம் அமைத்தாள்.வண்ண பொடிகளால் பத்மங்களை போற்றி போலமிட்டு அழகு படுத்தினாள். அதன் மீது ஒரு நுனி வாழை இலை போட்டு அதில் பச்சரிசி பரப்பி பித்தளை சொம்பில் சுண்ணாம்பு தடவி அதன்மேல் மாவிலை கொத்து வைத்து உச்சியில் தேங்காய் வைத்து அதை கலசமாக்கினாள்.


கலசத்தின் மீது அம்மன் முகம் பதித்தாள். அருகில் குத்து விளக்கு ஏற்றி வைத்தால் கலசத்தை மலர் மாலைகளால் அலங்கரித்தாள். பிறகு கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாகனம் செய்து சாருமதியும் அவள் வீட்டிற்கு வந்திருந்த மற்ற பெண்களும் பயபக்தியுடன் பிரார்த்தனை செய்தனர். வரலட்சுமி தேவியை வணங்க தேவையான ஸ்லோகங்களை சொல்லி பிரார்த்தித்து 16 வகையான உபசார பூஜைகள் செய்து 9 முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொண்டனர் .


வரலட்சுமிக்கு 9 வகையான நெய்வேத்தியம் படைத்து கற்பூர தீபம் காட்டி வலம் வந்து வழிபட்டனர். அவர்கள் ஒருமுறை வரலட்சுமியை வலம் வந்ததும் சாருமதி மற்றும் அங்கிருந்த பெண்களின் கால்களில் 'கலகல' என்ற ஓசை உண்டானது. அவர்கள் கால்களை பார்த்த போது அதில் மெட்டி கொலுசு போன்ற ஆபரணங்கள் மின்னின. இரண்டாவது முறை வலம் வந்த போது அந்த பெண்களின் கரங்களில் தங்கத்தால் ஆன பலவிதமான வளையல்கள் தோன்றி கலகலத்தன.


மூன்றாவது முறை வலம் வந்த போது நவரத்தினங்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் , பட்டுப்புடவை உள்ளிட்ட மதிப்பு மிக்க வஸ்திரங்கள் தோன்றின. அதோடு சாருமதி மற்றும் பூஜையில் பங்கேற்ற பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகையாக மாறின. மேற்கண்ட கதையை பார்வதி தேவிக்கு பரமேஸ்வரன் கூறினார்.மேலும் அவர் கூறுகையில் 'இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் நெடுங்காலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்பது திண்ணம்" .என்றார் இந்த வரலட்சுமி பூஜையை ஆண்டுதோறும் இடைவிடாமல் பெண்கள் அனைவரும் செய்து வர வேண்டும். மாதவிலக்கு போன்ற உடல் உபாதைகள் பாதிக்கப்படும் வேளையில் அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை செய்யலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News