ஸ்மிதின் அதிரடி சதத்தால் 338 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி!
ஸ்மிதின் அதிரடி சதத்தால் 338 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி!
By : Pravin kumar
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெறு வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் புகோவ்ஸ்கி களமிறங்கினர். அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்கள் மட்டும் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் புஜராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பிறகு புகோவ்ஸ்கி மற்றும் லாபுசாக்னே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசினர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு மழை குறுக்கிட்டதால் போட்டி சில நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதன்பிறகு புகோவ்ஸ்கி 62 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழக்க அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார்.
கடந்த இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடிய ஸ்மித் இந்த போட்டியில் நிதானமாக விளையாடி சதம் (131) விளாசினார். லாபுசாக்னே 91 ரன்கள் குவித்து ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட் இழந்து தனது சதத்தை தவறவிட்டார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது.