இரவில் மின்வெட்டு - காற்று வாங்க ரோட்டில் நின்ற மக்களுக்கு அரிவாள் வெட்டு! சென்னையில் தலைதூக்கும் ரவுடியிசம்!

By : Muruganandham
தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு மின்வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து மதுபோதையில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கு நின்றிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால், அங்கிருந்தவர்களை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார்.
அப்பகுதி மக்கள் உடனடியாக விரட்டிச் சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் நடத்திய தாக்குதலில், ஒரு பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கத்தியால் வெட்டிய நபர் சூனாம்பேட்டையைச் சேர்ந்த நீலமேகம் என்பதும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி சிவக்குமாரின் கூட்டாளி என்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
