Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் நிலங்களின் பத்திரங்களை தனியார் பதிவதை தடுக்க பலே முயற்சி!

கோவில் நிலங்களின் பத்திரங்களை தனியார் பதிவதை தடுக்க பலே முயற்சி!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 July 2021 12:22 PM GMT

சமீப காலமாக தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும் பணி நடந்து வருகிறது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பல கோயில்களுக்கு சென்று, அங்கு இருக்கும் அதிகாரிகளுடன், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். மேலும் பல கோயில்களின் நிலத்தை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்டு வருகின்றனர்.


இவ்வாறு இருக்கையில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நில நிர்வாகத்துறை ஆணையருக்கு கோயில்களின் நிலம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் "தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, கோவில் நில ஆவணங்களை வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தி இருப்பவை, பகுதியாக பொருந்தி இருப்பவை, புதிய விபரங்கள் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.


தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தும் ஆவண சொத்துக்கள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. பகுதியாக பொருந்தும் நிலையில் உள்ள ஆவணங்களில் கூடுதல் விபரங்கள் சேகரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில் அறநிலையத் துறை உருவாக்கி உள்ள, ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை முறையான 'IDMS' மென்பொருளை (software), பத்திரப்பதிவுக்கான 'ஸ்டார் - 2.0' மென்பொருளுடன் இணைக்க, பதிவுத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு முடிந்தால், கோவில் நிலங்கள் தொடர்பான பத்திரங்களை தனியார் பதிய வரும்போது, சார் பதிவாளர்கள் அதனை எளிதாக கண்டுபிடித்து தடுக்கலாம். அடுத்த கட்டமாக, வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், கோவில் நிலங்களை 'TEMPLE' என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான 'T' என்று அடையாளப்படுத்த வேண்டும்.

இதனால், கோவில் நிலங்களை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வது முழுமையாக தடுக்கப்படும். எனவே தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், இதற்கான குறியீட்டை சேர்க்க நில நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நில நிர்வாகத்துறை இதற்கான வழிகாட்டுதல்களை, தகவல் தொகுப்பை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையமான, என்.ஐ.சி. க்கு அனுப்ப வேண்டும்." என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News