திண்டுக்கல் மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது !
By : Dhivakar
கார்த்திகை தீப நாளென்பது இந்து பண்டிகைகளில் முக்கியமானது. இந்நாளன்று முக்கிய ஆலயங்களில் தீப கொப்பரையுடன் தீபம் ஏற்றுவது வழக்கம்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்கள் கட்சியினர் திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள அபிராமி அம்பிகை உடனுற பத்மகிரீஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று கார்த்திகை தீபம் ஏற்ற கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபம் நாளன்று வெள்ளிக்கிழமையில் அபிராமி அம்மன் கோயில் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பூஜைக்கான பொருட்களுடன் மலைக்கோட்டைக்கு ஓரமாக செல்வதற்கு தயாராக இருந்தனர்.
இந்து மக்கள் கட்சியினர் மற்றும் சிவ சேனா அமைப்பினர் தீப கொப்பரையுடன் சூடம் ஏற்றி "மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள கோயிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்" என முழக்கமிட்டனர்
இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் இரண்டு பெண்கள் உட்பட 23 பேர் ஊர்வலம் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரிடமிருந்து மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை பூஜை பொருட்கள் உள்ளிட்டவை காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.