"கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றினால் நல்ல லாபம் பார்க்கலாம்" ஈஷா பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை!
By : Kathir Webdesk
"கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதை நேரடியாக ஆலைகளுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக, அவர்களே நாட்டு சர்க்கரையாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்" என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்வது மற்றும் அதை மதிப்பு கூட்டி லாபகரமாக விற்பனை செய்வது குறித்த களப் பயிற்சி தஞ்சாவூரில் நேற்று (ஜூலை 31) நடைபெற்றது.
இதில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, கரும்பை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் வழிமுறைகளை நேரடி செயல் விளக்கத்துடன் செய்து காட்டினர்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.சோமசுந்தரம் கரும்பு நடவு செய்வது மற்றும் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். அரக்கோணத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு. பிரவீன் குமார், கரும்பு ஆலை அமைப்பது மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பின் போது பின்பற்ற வேண்டிய நுணுக்கங்கள் குறித்து பேசினார். அன்னூரைச் சேர்ந்த விவசாயி திரு. ஹரிபுத்திரன் வெறும் 2 பேர் மட்டுமே சேர்ந்து நாட்டு சர்க்கரை ஆட்டக் கூடிய சிறிய ஆலை வடிவமைப்பு குறித்து பேசினார்.
நெடாரில் உள்ள ஈஷா விவசாய பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சியில் அரியலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.