தமிழகத்தில் கோவளம் கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர் - இங்கிருந்து ஆரம்பமாகும் முன்மாதிரி திட்டம்!
By : Kathir Webdesk
75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கோவளம் கடற்கரையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில் கடற்கரைப் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தின் வாயிலாக கோவளம் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கூறிய அமைச்சர், 75 ஆவது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாடு முழுவதும் நாம் நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் எனவும், அதனைப் போற்றும் விதமாக கோவளம் கடற்கரையில் தேசியக் கொடியினை ஏற்றி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ள எட்டு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி 75 கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட உள்ளது. நடப்பாண்டு ஜூலை ஐந்தாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நிறைவுற இருக்கிறது.
பொறுப்புடன் நுகர்வோம், கழிவுகளை வீட்டிலேயே பிரித்து பொறுப்புணர்வுடன் அவற்றை அப்புறப்படுத்துவோம் என்ற மூன்று குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் பொதுமக்களால் நடத்தப்பட உள்ளது.
Input From: PIB