அறநிலையத்துறை தூக்கம்: கோவில் சொத்துக்களை பாதுகாக்ககோரி வழக்கு - ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
By : Kathir Webdesk
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவருடைய மனுவில்,
பெரம்பலுார் மாவட்டம், பிலிமிசை கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் சுவாமி, அய்யனார் சுவாமி கோவில்களுக்கு சென்றபோது, பாழடைந்து காணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, கலெக்டரிடம் அளித்த புகாரின்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக கமிஷனருக்கு அறிக்கை அளித்தார்.
கோவில் சொத்துக்களை பாதுகாப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டருக்கு, பல்வேறு அறிவுரை வழங்கிய வருவாய் நிர்வாக கமிஷனர், அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.
ஆனால், கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக, ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துகளை மீட்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு விசாரித்தனர். மனுவுக்கு மாநில வருவாய் துறை, பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் ஆகியோர், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Input from: Dinamalar