திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா!! தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற விசாரணை!!

By : Bharathi Latha
திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அறங்காவலர் குழு தரப்பில், நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், நீதிமன்றம் தெரிவிக்கும் புதிய நடைமுறையை செயல்படுத்த போதிய அவகாசம் தேவை எனக் கூறப்பட்டது. அறங்காவலர் குழு தரப்பில் 2 வார அவகாசம் கோரப்பட்டது. பின்னர் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்கு அறங்காவலர் குழுவினரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கலாமா என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில், இந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல என வாதிடப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மதிக்கும் அடையாளமாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்பதன் முன்னெடுப்பாகவே நீதிமன்றம் கூறும் 5 பேரை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க கூறினார்.
அதற்கு அரசுத் தரப்பில், கோயில் குருக்கள் சென்று பூஜை செய்யலாமே என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, தீபம் ஏற்றுவது குறித்து முடிவெடுப்பது குறித்து ஆலோசிக்கட்டும் எனக் கூறி விசாரணையை மார்ச் 18-க்கு தள்ளிவைத்தார்.
