இடிந்து விழும் நிலையில் ஆப்பூர் பஜனை கோவில் - 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் தலமும் கைவிடப்பட்ட சோகம்!
By : Kathir Webdesk
செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில், இடியும் நிலையில் உள்ள பஜனை கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்பூர் கிராம மலை மீது, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட நித்ய பிரசன்ன கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மூலவரை வழிபட, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் குடும்பத்துடன் வருகின்றனர்.
பஜனை கோவிலான இதன் கட்டுமானம் விரிசல் அடைந்தும், பெரிய மரங்கள் வளர்ந்தும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மலை மீதுள்ள பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்று நாள், பாரிவேட்டு திருவிழாவின்போது, கீழே பஜனை கோவிலில் இருக்கும் உற்சவர் பெருமாள் மற்றும் தாயாரை அலங்கரித்து, மலை மீது எடுத்து சென்று திருவிழா நடத்துவோம்.
கடந்த 1988ல் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சில ஆண்டுகளாக, பாரிவேட்டு விழா மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கோவிலுக்கு மற்ற நாட்களில் யாரும் வருவதே இல்லை. இதே வளாகத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் தலமும், பூஜை நடத்தப்படாமல் உள்ளது.
கோவில் கிணறுக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.எனவே, பழமையான கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி, தினமும் ஒரு கால பூஜையாவது நடத்த, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Input from: Dinamalar