Kathir News
Begin typing your search above and press return to search.

உலக பூமி தினத்தை முன்னிட்டு: தமிழ்நாடு முழுவதும் 'மண்ணோடு தொடர்பில் இருங்கள்' விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக பூமி தினத்தை முன்னிட்டு: தமிழ்நாடு முழுவதும் மண்ணோடு தொடர்பில் இருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2022 8:20 PM IST

சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான ஏப்ரல் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'மண்ணோடு தொடர்பில் இருங்கள் - Connect With Soil' என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் தேவையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தனது 65-வது வயதில் 100 நாட்களில் 3 கண்டங்கள், 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சவாலான பணியை மேற்கொண்டுள்ளார்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர் நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஸ்லோவினியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து அந்நாட்டு தலைவர்களுடன் மண் வளப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை தொடர்ந்து அவர் மத்திய கிழக்கு நாடுகள் சென்றுவிட்டு நிறைவாக இந்தியாவிற்கு பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, ஆன்டிகுவா & பார்படா, செயின்ட் லூசியா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், கயானா, பார்படாஸ் ஆகிய 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை பாதுகாக்க மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

மேலும், ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (WFP) மற்றும் CARICOM எனப்படும் கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து இணைந்து செயலாற்ற உள்ளன. மேலும், 54 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள காமன்வெல்த் அமைப்பும் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News