Kathir News
Begin typing your search above and press return to search.

துறைமுகம் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை ஈரடுக்கு மேம்பால 8 வழிச்சாலை திட்டம் - கட்கரி அதிரடி அறிவிப்பு!

துறைமுகம் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை ஈரடுக்கு மேம்பால 8 வழிச்சாலை திட்டம் - கட்கரி அதிரடி அறிவிப்பு!

துறைமுகம் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை ஈரடுக்கு மேம்பால 8 வழிச்சாலை திட்டம் - கட்கரி அதிரடி அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2020 11:03 AM GMT

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்ததாக அதிக அளவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ள நகரமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உள்ளன. கிட்டத்தட்ட 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்கு உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவற்றில் 75 சதவீதத்துக்கு மேல் இரு சக்கரவாகனங்கள் என்றும் கூறப்படுகிறது. இவை தவிர வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கு மேல் இருக்குமென்று கூறப்படுகிறது.

இதனால் சென்னை நகரம் வாகனப் போக்கு வரத்து சிக்கலால் மிகப்பெரிய அளவில் அவஸ்தைப்படுகிறது. சென்னை நகருக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுதல் மற்றும் புதிய சிக்னல்கள் அமைத்தல் முடிந்த இடங்களில் சாலைகள் அகலப்படுத்தல் என பல நடவடிக்கைகள் எடுத்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ச்சியடைந்த சென்னைக்குள் சாலையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் அகலப்படுத்த முடியவில்லை என்பதே உண்மையாகும்.

மேலும் மாநகர வளர்ச்சி காரணமாகவும், புறநகர் பகுதிகள் வளர்ச்சி காரணமாகவும், வெளியூரில் இருந்து வந்து செல்லும் அதிக கார்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மற்றும் கல்லூரி, பள்ளிப் பேருந்துகள் என இப்போது சென்னைக்கு வெளியே அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை நகர போக்குவரத்து நெரிசல் தாம்பரத்தையும் தாண்டி பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, காட்டாங் கொளத்தூர், சிங்கபெருமாள் கோவில் வரை தொடர்கிறது.

பீக் நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் வண்டலூரில் இருந்து தாம்பரம் வரை வரவே ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிடுகிறது. காலை 10 மணிவரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் நகர்கின்றன.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் மத்திய அரசு உத்தரவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் சாலைகளை அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்த நிலையில், தற்போது திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு துறைமுகம் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை இரு அடுக்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தெரிகிறது.வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பாலம் ஒன்றாகவும், நகர் பகுதிகளுக்குள் சென்று வர ஒரு பாலம் எனவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த திட்டங்கள் குறித்து மாநில அரசுடன் விவாதித்து இறுதி செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி இன்று சென்னை வந்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கிய அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் விவாதித்தேன். நிலக் கையகப்படுத்தல் சிக்கலுக்கு தீர்வு காண உதவுவதாக முதலமைச்சர் கூறினார்.

மேலும் கூடுவாஞ்சேரி - செட்டிப்புண்ணியம் நெடுஞ்சாலை விரிவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றார். மேலும் சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் இது வரை பேச்சுவார்த்தை அளவிலேயே இருந்த இந்த திட்டம் இனி செயல் வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News