நடிகர் விவேக் மரணத்தையும், தடுப்பூசியையும் சேர்த்து பேசாதீங்க: அமைச்சர் விஜயபாஸ்கர்.!
நடிகர் விவேக்கின் மறைவையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து பேச வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By : Thangavelu
நடிகர் விவேக் மரணத்தையும், கொரோனா தடுப்பூசியையும் இணைத்து பேச வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் விவேக். இவருக்கு நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நடிகர் விவேக்கின் மறைவையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து பேச வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் மீதும், மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவேக் மறைவு குறித்து சில அரசியல் கட்சியின் தலைவர்கள் தடுப்பூசி பற்றியும் முடிச்சு போட்டு பேசி வருகின்றனர். இது போன்று பேசுவதால் சாதாரண மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுவார்கள். எனவே விஞ்ஞானிகள் உருவாக்கிய தடுப்பூசி மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே தேவையின்றி பேசும் நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.
