ஒழுங்காக எழுதவில்லை என யூ.கே.ஜி சிறுவனை வலிப்பு வரும் வரை அடித்த 3 ஆசிரியர்கள்
By : Kathir Webdesk
தமிழ், ஆங்கில எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை எனக்கூறி யுகேஜி மாணவனை அடித்த 3 தனியார் பள்ளி ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 6 வயது மாணவன், அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். கடந்த 9 ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, மாணவன் ஆங்கில எழுத்துகளையும், தமிழ் எழுத்துகளையும் ஒழுங்காக எழுதவில்லை என கூறப்படுகிறது.
அதற்குப்போய் 3 ஆசிரியர்கள் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைகூட அழைத்துச் செல்லாமல் பள்ளியில் இருந்த சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு அழைத்து செல்லும் போது சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது.
உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் பிரின்சி, வகுப்பு ஆசிரியர் இன்டியனா வான், ஆங்கில ஆசிரியர் மோனோ பெராரா ஆகியோரை திருவிக நகர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர்கள் 3 பேரும் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.