புதுக்கோட்டையில் அதிர்ச்சி: அங்கன்வாடியில் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!
![புதுக்கோட்டையில் அதிர்ச்சி: அங்கன்வாடியில் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு! புதுக்கோட்டையில் அதிர்ச்சி: அங்கன்வாடியில் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!](https://kathir.news/h-upload/2022/06/03/1367655-angan-wadi.webp)
அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தொண்டைமான் நகராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு தினந்தோறும் 36 குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று (ஜூன் 2) வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் காட்டூத்தீ போன்று பரவியதால், குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தில் குவிந்தனர். என்ன காரணத்திற்காக குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என்ற கேள்வியை எழுப்பினர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மொத்தம் 28 குழந்தைகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகள் சாப்பிட்ட உணவு மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து திருச்சியில் உள்ள ஆய்வகத்துக்குப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்ட பாசிப்பயற்றில் வண்டும் இருப்பதாகவும், அதனை சமைத்து கொடுத்த காரணத்தினால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். எனவே இது போன்ற சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
Source, Image Courtesy: Vikatan